மகாநதி: “காவேரி – நிவின் ஜோடி தான் பெஸ்ட்'' – வைரலாகும் ரசிகர்களின் வேண்டுகோள்!

Estimated read time 1 min read

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் `மகாநதி’. ஆரம்பம் முதலே இந்தத் தொடர் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வந்தது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு விஜய் டிவியில் இந்தத் தொடர் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

இந்தத் தொடரின் கதையோட்டம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது தொடரில் பல திருப்பங்கள் நிகழ இருக்கின்றன.

மகாநதி

`மகாநதி’ மெகா தொடர் கடந்த ஜனவரி மாதத்தில் ஒளிபரப்பைத் தொடங்கியது. இந்தக் கதையோட்டம் நான்கு சகோதரிகளின் கதையை மையப்படுத்தியது. சந்தானம் என்கிற கதாபாத்திரம் தன் குடும்பத்தை விட்டு துபாயில் வேலை செய்து வர, அவருடைய குடும்பத்தினர் கொடைக்கானலில் வசித்து வருகிறார்கள். சந்தானத்தின் மூத்த மகள் கங்கா, இரண்டாவது மகள் காவேரி. கடைசி மகள் நர்மதா.

நிவின் எனும் கதாபாத்திரம் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட கொடைக்கானலுக்கு வருகை தர, அங்கே காவேரியைப் பார்த்தவுடன் காதலில் விழுகிறான். இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது. இது ஒரு பக்கம்!

காவேரி – நிவின்

இன்னொரு பக்கம் சந்தானம், தன் மூத்த மகள் கங்காவின் நிச்சயதார்த்தத்தையொட்டி உயிர்த் தோழன் பசுபதியை சந்தித்து வங்கியில் செலுத்தச் சொல்லிக் கொடுத்திருந்த பணத்தை எடுத்துத் தருமாறு கேட்க, பசுபதி அந்தப் பணம் முழுவதையும் தனது நிலத்தை ரிஜிஸ்டர் செய்வதற்கே சரியாக இருந்ததாகவும், வங்கியில் வேறு பணம் இல்லை என்றும் சொல்ல சந்தானம் அதிர்ச்சியடைகிறார். அடுத்த நாள் காலையில் சந்தானம் தூக்கத்திலேயே இயற்கை எய்துவதாக கதைக்களம் அமைந்தது.  அப்பாவின் திடீர் மரணத்தினால் நின்று போன நிச்சயதார்த்தத்தைப் பற்றி ஊரே பேச வேற வழியில்லாமல் கங்கா பிடிக்காமல் சொந்தக்காரனான குமரனைத் திருமணம் செய்து கொள்கிறாள். 

இதற்கடுத்து தன் அப்பாவின் நண்பர்கள் கொடுத்த அப்பாவின் உடமைகள் மூலம் பணத்தை அப்பா அவருடைய நண்பரான பசுபதிக்கு கொடுத்ததை காவேரி தெரிந்து கொள்கிறாள். இதனை யூகித்துக் கொண்ட பசுபதி நிவினும், காவேரியும் காதலிப்பதை தெரிந்து கொண்டு தனது மகள் ராகினியை நிவினுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறான். ஆனால் நிவினும், காவேரியும் எல்லார் முன்னிலையிலும் பசுபதியின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தி விடுகின்றனர்.

காவேரி – நிவின்

இதற்கிடையில் சந்தானத்தின் கடைசி மகள் நர்மதா உடல்நிலையில் பிரச்னை வருகிறது. உடனடியாக நர்மதாவிற்கு இருதய அறுவைச்சிகிச்சை செய்தாக வேண்டிய சூழல். கொடைக்கானலில் இருந்து குடும்பத்துடன் சென்னைக்கு வருகிறார்கள். பசுபதி, காவேரி எல்லார் முன்னிலையிலும் தன்னை அசிங்கப்படுத்தியதற்காக அந்தக் குடும்பத்தின் மீது கோபத்தில் இருக்கிறார். சென்னையில் காவேரி குடும்பத்தினர் தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளர் விஜய் பசுபதியிடம் சண்டையிட்டு காவேரி குடும்பத்தினருக்கு சப்போர்ட் ஆக இருக்கிறார்.

பசுபதியிடம் சந்தானத்தின் பணத்தை வாங்கி அந்தப் பணத்தை குமரனின் அக்கவுண்ட்டில் போட எதிர்பாராத விதமாக அந்தப் பணம் தொலைந்து போகிறது. நர்மதாவின் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் இருக்க வேறு வழியில்லாமல் காவேரி விஜயிடம் ஒரு கான்ட்ராக்ட் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள். நர்மதாவின் சிகிச்சை நல்லபடியாக நடந்த கையோடு காவேரி விஜயை திருமணம் செய்து கொண்டு வீட்டிற்கு வர வீட்டில் அனைவரும் அதிர்ந்து போகிறார்கள்.

காவேரி

காவேரிக்கு திருமணம் நடந்து விட்டது என்பதை தெரிந்து கொண்ட நிவின் மனமுடைகிறான். நிவின் ராகினியை திருமணம் செய்து கொண்டிருப்பான் என நினைத்துக் கொண்டிருந்த காவேரிக்கு நிவின் யாரையும் திருமணம் செய்யவில்லை என்பது தெரிய வர காவேரிக்கு அது பெரும் வலியாக இருக்கிறது.

விஜயின் குடும்பம் விஜய் – காவேரிக்கு திருமண வரவேற்பு நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். அந்த வரவேற்பு நிகழ்வுக்கு நிவின் வருகிறான். நிவினின் வருகையால் அங்கே குழப்பங்கள் ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

விஜய் – காவேரி

இந்நிலையில், `மகாநதி’ தொடர் ரசிகர்கள் நிவின் – காவேரி ஜோடி தான் பெஸ்ட் ஜோடி. விஜய் – காவேரியின் திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நிவினும், காவேரியும் இணைந்திருக்கலாம் எனத் தொடர்ந்து கமென்ட் இட்டுக் கொண்டிருக்கின்றனர்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours