தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
2000ம் ஆண்டு ‘Pilots’ என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமானவர். நடிகையாக இவர் அறிமுகமான ‘கீதாஞ்சலி’ 2013ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி வெளியானது. இதையடுத்து ‘இது என்ன மாயம்’, ‘ரஜினி முருகன்’ உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தனுஷுடன் ‘தொடரி’, விஜய்யுடன் ‘பைரவா’, ‘சர்கார்’, சூர்யாவுடன் ‘தானா சேர்ந்த கூட்டம்’ என தமிழ் சினிமாவில் மூன்றே ஆண்டுகளில் பிரபல நடிகையாக வலம் வரத் தொடங்கிவிட்டார். நடிகை சாவித்திரியின் வாழ்க்கைக் கதையான ‘மகா நடிகை’ படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை வென்றார். ‘பென்குயின்’, ‘மிஸ் இந்தியா’, ‘சாணிக் காயிதம்’ உள்ளிட்ட படங்களில் மைய கதாபத்திரமாக நடித்து ரசிகர்கள் மனதைக் கவர்ந்தார்.

அவரது லன் அப்பில் ‘சைரன்’, ‘ரகு தாத்தா’, ‘ரிவால்வர் ரீட்டா’, ‘கண்ணிவெடி’ உள்ளிட்ட படங்கள் வரிசையாகக் காத்திருக்கின்றன.
நேற்றுடன் கீர்த்தி சுரேஷ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமாகி 10 ஆண்டுகளை நிறைவாகிவிட்டது. இந்நிலையில் சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் எனப் பலரும் அவருக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் வீடியோ பதிவிட்டுள்ள கீர்த்தி, “என் திரையுலகப் பயணத்தில் 10 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த நேரத்தில் நான் பலருக்கும் எனது நன்றிகளைக் கூற வேண்டும். முதலில் என் அப்பா, அம்மாவுக்கு நன்றி, அவர்கள் இல்லை என்றால் நான் இந்த இடத்தில் இருக்க மாட்டேன். என் குரு ப்ரியன் அவர்களுக்கு நான் என்றென்றைக்கும் கடமைப்பட்டுள்ளேன். என் திரையுலகப் பயணத்தின் தொடக்கத்திற்கானக் காரணம் அவர்தான்.
With love and Gratitude ❤️#10years pic.twitter.com/7oXslvuh8I
— Keerthy Suresh (@KeerthyOfficial) November 14, 2023
அதுமட்டுமின்றி என்னுடைய தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், மீடியா நண்பர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி. என் ரசிகர்கள் இல்லாமல் நான் இல்லை, அவர்களுக்காக நான் இன்னும் பல படங்கள் சிறப்பாக நடிப்பேன். என் திரையுலகப் பயணம் ஆரம்பித்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், நான் இப்போதுதான் தொடங்கியிருக்கிறேன் என்று கருதுகிறேன். நான் இன்னு வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கிறது. இந்த நேரத்தில் என்னை ட்ரோல் செய்பவர்களுக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன். அவர்களின் விமர்சனங்களும் என்னை வளர்த்திருக்கிறது” என்று கூறியுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
+ There are no comments
Add yours