“பிரபாகரனின் பிரேத பரிசோதனை அறிக்கை தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது” : இலங்கை அரசு

Estimated read time 1 min read

இலங்கை:

Velupillai Prabhakaran: பிரபாகரனின் மரணம் இன்னும் ஒரு மிகப்பெரிய புதிராகவே இருந்து வருகின்றது. அவரது மரணம் குறித்த பல சர்ச்சைகளும், கேள்விகளும், சந்தேகங்களும் அவ்வப்போது எழுவதுண்டு.

இலங்கை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணம் இன்னும் ஒரு மிகப்பெரிய புதிராகவே இருந்து வருகின்றது. அவரது மரணம் குறித்த பல சர்ச்சைகளும், கேள்விகளும், சந்தேகங்களும் அவ்வப்போது எழுவதுண்டு. அவர் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார் என சிலர் நம்பும் அதே வேளையில் இலங்கை அரசாங்கம் அதை தொடர்ந்து மறுத்து வருகின்றது. இந்த நிலையில் பிரபாகரன் மரணம் குறித்து ஒரு மிகப்பெரிய செய்தி இலங்கை அரசு சார்பாக சமீபத்தில் வெளிவந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்குவது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது மீண்டும் ஒரு முறை பல வித சர்ச்சைகளுக்கு துவக்கப்புள்ளியாகியுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில், ஆளும் அரசுக்கும் தமிழ் ஈழ விடுதலை அமைப்பினருக்கும் இடையிலான போர் பல ஆண்டுகள் நடந்தது. ஏகப்பட்ட உயிர் சேதத்தை கண்ட இந்த போர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணத்துக்கு பின்னர் முடிவடைந்தது. இலங்கையில் போர் முடிந்து 14 வருடங்கள் ஆகிவிட்டன என்றாலும், இன்றும் பிரபாகரனின் மரணம் தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

பிரபாகரனின் மரணம் தொடர்பான சரியான தகவல்களை இலங்கை அரசாங்கம் அளிக்காததே இதற்கு முக்கிய காரணமாகும். குறிப்பாக பிரபாகரனின் மரபணு (டிஎன்ஏ) பரிசோதனை, பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் ஆகியவற்றை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்தாமல் இருப்பதாக அதன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் இந்த செயலால் பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறாரோ என்ற ஊகங்கள் வலுப்பெருகின்றன. பலர் இதனை காரணம் காட்டி பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்கிற வாதங்களை முன்வைத்து வருகின்றனர். எனினும், ஒவ்வொரு முறை இப்படிப்பட்ட கருத்துக்கள் வெளிவரும் போதும், இவற்றை இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்து வருகிறது.

இந்த நிலையில், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பிரபாகரனின் பிரேத பரிசோதனை அறிக்கையை அரசாங்கம் வழங்க வேண்டும் என ஊடகவியலாளர் மிதுன் ஜயவர்தன கோரியுள்ளார்.

பிரபாகரனின் பிரேதப் பரிசோதனை அறிக்கை, டிஎன்ஏ பரிசோதனை அறிக்கை, உயிரிழந்தது பிரபாகரன் என உறுதி செய்வதற்கு யாரிடமிருந்து டிஎன்ஏ மாதிரிகள் பெறப்பட்டன? என்பது தொடர்பான தகவல்களை வழங்கக்கோரி இந்த தகவலறியும் விண்ணப்பம் முன்வைக்கப்பட்டிருந்தது.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சகம், இராணுவ தலைமையகத்துக்கு தான் இந்த விண்ணப்பித்தை அனுப்பி வைத்திருந்ததாக ஊடகவியலாளர் மிதுன் கூறுகிறார்.

எனினும் ஊடகவியலாளரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. “தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இந்தத் தகவல்களை வழங்கினால் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்” என்று குறிப்பிட்டு இலங்கை இராணுவமும், இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகம் ஊடகவியலாளரின் தகவல் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

எனினும், இது தொடர்பாக இலங்கை தகவலறியும் ஆணைக்குழுவுக்கு மேல்முறையீடு செய்துள்ளதாகவும் ஊடகவியலாளர் மிதுன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிலும் பல தலைவர்கள் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக அவ்வப்போது கூறி வருவதுண்டு. சில நாட்களுக்கு முன்னர், பிரபாகரன் உயிரோடு இருப்பதாக  பழ. நெடுமாறன் கூறினார். இது அரசியல் தளத்தில் விவாதப்பொருளாக மாறியது.

பழ. நெடுமாறனின் கருத்துக்கு இலங்கை ராணுவம் மறுப்பு தெரிவித்து தங்களிடம் அவர் உயிரிழந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் பதிலளித்தது. பிரபாகரன் உயிருடன் இருந்தபோது, இணக்கமாக இருந்த வைகோ உள்ளிட்ட தலைவர்கள் பழ. நெடுமாறனின் கூற்றுக்கு கருத்து தெரிவித்தனர். மேலும் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ. நெடுமாறன் கூறியதற்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ” விடுதலை புலிகளின் தலைவர் உயிருடன் இருக்கிறார் என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை, சில கேள்விகள்தான் உள்ளது. தம்பி பாலச்சந்திரனை சாகவிட்டுட்டு தன் உயிரை தப்பி போகிற கோழையில்லை அவர். எக்காரணத்தை கொண்டும் நாட்டை விட்டு வெளியேறமாட்டேன் என்று கூறியவர், 15 ஆண்டுகளாக  பதுங்கி இருக்க மாட்டார்.” என்று கூறி இருந்தார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours