ஆன்லைன் சூதாட்டம் மனைவி குழந்தைகளை கொன்று வங்கி அதிகாரி தற்கொலை

Estimated read time 1 min read

சென்னை:

சென்னை பெருங்குடி பகுதியில் வசித்து வந்தவர் மணிகண்டன் (வயது 36). இவர் தனியார் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி பிரியா இவரும் வங்கி ஊழியர் தான். இவர்களுக்கு தரன், தாஹன் என இரண்டு மகன்கள் இருந்தனர். மணிகண்டன் இதற்கு முன்பு லண்டனில் உள்ள வங்கி ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஒருவருடத்துக்கு முன்பு தான் சென்னையில் உள்ள வங்கியில் பணிக்கு சேர்ந்துள்ளார். சென்னை பெருங்குடியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கணவன் மனைவி இருவரும் வங்கி ஊழியர்கள் என்பதால் கை நிறைய காசு வந்துள்ளது. இதன்காரணமாக ஆடம்பரமாக செலவு செய்து வந்துள்ளனர்.

மணிகண்டன் வீடு நேற்று நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. வழக்கமாக வெளியில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளும் வெளியே வரவில்லை. மணிகண்டன் வீட்டில் இருந்து வெகுநேரம் யாரும் வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் வீட்டின் கதவை  உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் பிரியாவும் குழந்தைகள் சடலமாக கிடந்துள்ளார். பிரியா தலையில் அடிப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

கிரிக்கெட் பேட்டில் ரத்தக்கறை

மணிகண்டன் சமையல் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து நான்கு பேரில் சடலத்தையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மணிகண்டன்  வீட்டில் இருந்த கிரிக்கெட் பேட்டில் ரத்தக்கறை இருந்துள்ளது. மனைவி பிரியாவின் தலையில் பலத்த காயம் உள்ளது.

மணிகண்டன் பிரியாவை அடித்து கொலை செய்துவிட்டு அதன்பின் குழந்தைகளை தலையணையால் அழுத்தி கொலை செய்திருக்கலாம் அதன்பின் சமையல் அறைக்கு சென்று மணிகண்டன் தூக்கு மாட்டி தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக துரைப்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்த பணம்

போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடன் பிரச்னையில் மணிகண்டன் இந்த விபரித முடிவு எடுத்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. மணிகண்டனின் அக்கம்பக்கத்து வீட்டினர் மற்றும் நண்பர்களிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில்  பெட்ரோல் பங்க் அமைக்கவுள்ளதாக கூறி 75 லட்சத்துக்கு மேல் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. வங்கி அதிகாரி என்பதால் இவரை நம்பி பலரும் கடன் கொடுத்துள்ளனர்.  மணிகண்டன் கடனாக வாங்கிய பணத்தை ஷேர் மார்க்கெட்டிலும், ஆன்லைன் சூதாட்டத்திலும் இழந்து விட்டதாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் இந்த விவரம் அறிந்து அவருக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் குடும்பத்திலும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.

கணவன் – மனைவி இடையேயும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த இரண்டு மாதமாக மணிகண்டன் வேலைக்கும் செல்லாமல் இருந்துள்ளார். கடுமையான மன உளைச்சலில் இருந்த மணிகண்டன் மனைவி, மற்றும் குழந்தைகளை கொலை செய்து விட்டும் தானும் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸார் கூறுகின்றனர்.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours