புற்று நோயாளியின் வேதனை

Estimated read time 1 min read

புற்று நோயாளியின் வேதனை

புற்று நோய் நிபுணர் குமாரின் அழைப்பை ஏற்று அந்த மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன் . ”
பேரு கனகராஜ் . வயசு 59 . அரசாங்க வேலையிலருந்து ரிட்டயர் ஆனவரு . நல்ல காசு.குடல்ல கேன்சர் . இறுதிக்கட்டம் . வலியில் துடிச்சிக்கிட்டிருக்காரு.பல லட்சம் செலவாயிருச்சி . இருந்தாலும் நிச்சயமா குணமாகாதுன்னு தெரிஞ்சப்பறம் ஏன் பணத்த விரயம் பண்ணனும் . அவர் செத்துட்டாக்கூடத் தேவலைன்னு தோணுது . நீங்க அவரை பாக்கறீங்களா
” நான் பார்த்து என்ன செய்யப் போறேன் .
அவர் பக்கத்துல உக்காந்து அவர் கையப் பிடிச்சிக்கங்க . அவர் மனைவிகிட்ட பச்சைப்புடவைக்காரி கைவிடமாட்டாங்கற மாதிரி நாலு நல்ல வார்த்தை சொல்லுங்க ” ஏற்றுக்கொண்டேன் . ” அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன் ‘
” குமார் வெளியேறியதும் ஒரு நர்ஸ் உள்ளே வந்தாள் . ” பரவாயில்லையே ! பிரச்னைகளைத் தீர்க்கத் தனியாகக் கிளம்பிவிட்டாயே … வாழ்த்துக்கள்
” அவள் காலில் விழுந்தேன் . ” உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் நான் போகவில்லை தாயே ” ” மனதை அன்பால் நிரப்பிக்கொண்டு அவன் அருகில் அரை மணி நேரம் இரு . சட்டென்று பரிகாரம் சொல்லும் வகை இல்லை இது . முயன்று பார்க்கலாம் ” பச்சைப்புடவைக்காரி போய்விட்டாள் . நான் அறையில் நுழைந்தபோது கனகராஜ் வலியால் முனங்கி கொண்டிருந்தார் . அவரது மனைவி கைகூப்பினாள் .நான் கனகராஜின் கையைப் பிடித்தபடி அமர்ந்தேன் . அருகே டாக்டர் குமார் . திடீரென என் உடல் சிலிர்த்தது . கனகராஜின் வாழ்க்கை மனதில் திரைப்படமாக ஓடியது
. கனகராஜ் மிக செல்வாக்கான பதவியில் இருந்திருக்கிறார் . போடாத ஆட்டம் இல்லை . அவருடைய துறையில் பணிபுரிந்த ஒருவர் இறந்துவிட்டார் . அவருடைய மனைவிக்குக் கருணை அடிப்படையில் வேலை கொடுக்க அரசு முன்வந்தது . கனகராஜ் குட்டையைக் குழப்பிவிட்டு அந்த வேலை கிடைக்காமல் பார்த்துக் கொண்டார் . அவள் அவரிடம் வந்து அழுதபோது வேலை வேண்டுமென்றால் உன் கற்பைக் கொடு என்று மிரட்டினார் . லஞ்சம் என்ற பெயரில் பல குடும்பங்களின் வாழ்வாதாரங்களைப் பறித்தார் . ஒருமுறை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் மாட்டிகொண்ட போது பழியைச் சாமர்த்தியமாக இன்னொருவரின் மீது போட்டு தப்பித்தார் . கனகராஜின் சூழ்ச்சியின் காரணமாக மாட்டிக் கொண்ட அவர் தற்கொலை செய்துகொண்டார் . எனக்கு முதலில் கோபம் வந்தது , பின் மனம் தெளிவானது . கனகராஜின் கையை இறுக்கமாகப் பற்றியபடி ” அல்லல்படுவோர் நெஞ்சமெல்லாம் அன்பால் என்றும் நிறையட்டும் ” என பிரார்த்திக்க ஆரம்பித்தேன்
. நர்ஸ் வடிவில் இருந்த பச்சைப்புடவைக்காரி அறைக்குள் நுழைந்தாள் . நோயாளியைப் பரிசோதிப்பதுபோல் அவர் நெற்றியைத் தொட்டாள் . என்னைப் பார்த்துப் புன்னகைத்தபடி சென்றாள் . திடீரென கனகராஜ் அலறினார் . ” வலி தாங்க முடியல டாக்டர் . பேசாம விஷஊசியப் போட்டு கொன்னுடுங்க கனகராஜின் மனைவி மவுனமாக அழுது கொண்டிருந்தாள் .. அவளுக்கு ஆறுதல் சொல்லலாம் என்று நினைத்தேன் . என் வாயிலிருந்து பேச்சு வரவில்லை .
டாக்டர் குமார் எழுந்து பார்த்து ஜாடை காட்டினார் . அறையை விட்டு வெளியேறினோம் . ” ஏன் சார் பச்சைப்புடவைக்காரி தன் கருணைக்கண்ணத் திறக்கமாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கறா ” “ தெரியலையே . ஏன்னு கேள்வி கேக்க இந்தக் கொத்தடிமைக்கு உரிமை இல்லையே ”
” அந்தாளு சொன்ன மாதிரி விஷ ஊசி போட்டுக் கொன்னுரலாம்னுகூடத் தோணுது . நோய் குணமாக வாய்ப்பேயில்ல சார் . பச்சைபுடவைக்காரி ஏன் சார் கல்மனசுக்காரியா இருக்கணும் ” கனகராஜின் கடந்த காலத்தை குமாரிடம் சொல்ல எனக்கு மனம் இல்லை . டாக்டருக்கு அழைப்பு வந்தது . ஓடினார் .
நான் அவரது அறையில் தனியாக இருந்தேன் . நர்ஸ் வடிவில் இருந்த பச்சைப்புடவைக்காரி உள்ளே நுழைந்தாள் . ” அவனை நிம்மதியாகச் சாகவாவது விடலாமே தாயே “
விடலாம் . ஆனால் அடுத்த பிறவியிலும் இதே துன்பம் தொடரும் ”
” செலவும் நிறைய ஆகிறதே ”
” தப்பான வழியில் பணம் செலவழிந்துவிட்டால் அவன் பாவங்கள் அவனோடு போய்விடும் . இல்லாவிட்டால் அவை அவன் குடும்பத்தை தாக்கும் . அவன் மலையளவு பாவம் செய்திருக்கிறான் . உங்கள் அன்பென்னும் கடப்பாறையால் அதை நெம்பித் தள்ள முடியவில்லை ”
” நீங்களே அவனைத் தொட்டீர்களே ! அதன் மூலம் அருளைக் கொடுத்தீர்களே … அப்படியுமா விடுதலை கிடைக்கவில்லை ” ” இறுகிப் போயிருக்கும் அவன் மனதால் என் அன்பை உணர முடியவில்லை ”
அன்னை மறைந்து விட்டாள் .
குமார் பதற்றத்துடன் ஓடிவந்தார் .
” உடனே என்கூட வாங்க ” கனகராஜின் அறைக்கு ஓடினோம் .அங்கே அவருடைய மனைவியும் இரண்டு மகள்களும் இருந்தார்கள் . கனகராஜ் கத்தினார் . ” என் பொண்டாட்டி | புள்ளைங்க மேல சத்தியமாச் சொல்றேன் டாக்டர் . நான் தப்பான வழியிலதான் சம்பாதிச்சேன் . அதுதான் வலியால அழுதுக்கிட்டிருக்கேன் . நான் சம்பாதிச்ச சொத்து எதுவும் என் குடும்பத்துக்கு வேண்டாம் டாக்டர் . நீங்க புத்து நோயாளிங்களுக்கு ஒரு டிரஸ்ட் நடத்தறீங்களாமே அதுக்கு எழுதி வச்சிடறேன் . வக்கீல வரச் சொல்லியிருக்கேன் . உயில்ல கையெழுத்து போடறவரைக்கும் நான் உயிரோட இருக்கறதுக்கு ஏதாவது மருந்து கொடுங்க டாக்டர் . என் பொண்டாட்டி ஸ்கூல் டீச்சரா இருக்கா . அவ சம்பாத்தியத்துல குடும்பத்தை கரை சேத்திருவா .
என் உடம்புல இதயம் , கண்கள் , கிட்னி எல்லாம் நல்லா இருக்கு . நான் செத்தப்பறம் அத வேற யாருக்காவது கொடுத்திருங்க . என் உடம்ப மருத்துவக் கல்லுாரிக்குக் கொடுத்திருங்க ” அதன்பின் காரியங்கள் வேகமாக நடந்தேறின . அன்று மாலையே பத்திரப்பதிவாளர் மருத்துவமனைக்கு அழைக்கப்பட்டு உயிலில் கையெழுத்திட்டார் கனகராஜ் . எல்லாம் முடிந்ததும் கனகராஜ் களைப்புடன் கண்களை மூடினார் . அதன்பின் கண்களைத் திறக்கவேயில்லை . அவருடைய கடைசி விருப்பம் நிறைவேற்றப்படும் என்று குமார் சொன்னார் .
நான் மருத்துவமனையை விட்டு வெளியேறும்போது இரவு பதினொரு மணி . என் காருக்கு அருகில் அந்த நர்ஸ் நின்றிருந்தாள் . ஓடிச் சென்று அவள் காலில் விழுந்தேன் .
” அவனுடைய வாழ்வின் கடைசி நிமிடங்களில் காட்டிய அன்பு அவன் கர்மக்கணக்கை நேர் செய்துவிட்டது . அன்பென்னும் ஒளி பல வருடங்களாக இருந்த இருட்டை ஒரே கணத்தில் விரட்டிவிட்டது .. கனகராஜ் கடைத்தேறிவிட்டான் . உனக்குப் பிறவா வரத்தைத் தரலாம் என்று இருக்கிறேன் ”
” வேண்டாம் தாயே … நான் இந்த உலகில் மீண்டும் மீண்டும் பிறக்கவேண்டும் . இந்த உலகின் கடைசி மனிதனின் மனதில் அன்பு நிறைந்து அவன் உங்களுடன் ஒன்றும்வரை நான் இந்தப் பூமியில் பிறந்துகொண்டேயிருக்கவேண்டும் ” ” அடுத்து என்ன பிறவி வேண்டும் ” யோசித்தேன் . ” அடுத்த முறை பார்க்கும்போது நீ பிறவியைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும் ” தலையாட்டினேன் . அடுத்த கணம் அவள் அங்கு இல்லை .

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours