செல்போன் திருடியதாக சிறுமியை மரத்தில் கட்டி வைத்து அடித்த கொடூரம்

Estimated read time 0 min read

கீரமங்கலம்,

சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் 12 வயது சிறுமி ஒருவர் பக்கத்து வீட்டில் இருந்த செல்போனை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் டீ வாங்க சென்ற போது அவரை சிலர் மடக்கி பிடித்து ஒரு மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த சிறுமியை மீட்டனர்.

பசிக்கொடுமை

இந்த சம்பவம் குறித்து அந்த சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பசியின் கொடுமை தாங்காமல் செல்போன்களை திருடி வந்தது தெரிய வந்தது. மேலும் அந்த செல்போன்களை கடையில் விற்று பரோட்டா வாங்கி சாப்பிட்டு வந்ததாக வெகுளியாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் வீட்டில் இருந்த ஒரு செல்போனை போலீசார் மீட்டனர்.

சிறுமியின் தாய் மற்றும் தந்தை கூலி வேலை செய்து வருவதும் அவரது தந்தை மீது ஏற்கனவே சில வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

போலீசார் விசாரணை

கொரோனாவால் தந்தை வேலையின்றி வீட்டில் இருக்கிறார். தாய் வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருவதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து கீரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கீரமங்கலம் அருகே செல்போன் திருடியதாக 12 வயது சிறுமியை மரத்தில் கட்டிவைத்து அடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours