25 ஆண்டுகளை நிறைவு செய்த படையப்பா

Estimated read time 1 min read

25 ஆண்டுகளை நிறைவு செய்த ‘படையப்பா’

10 ஏப், 2024 – 12:02 IST

எழுத்தின் அளவு:


Padayappa-completes-25-years

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சவுந்தர்யா, மணிவண்ணன், நாசர் மற்றும் பலர் நடிப்பில் 1999ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ம் தேதி வெளியான படம் ‘படையப்பா’.

குடும்பம், காதல், ஆக்ஷன் என அனைத்து அம்சங்களையும் கொண்ட கமர்ஷியல் படமாக வெளிவந்து மாபெரும் வெற்றியைப் பெற்ற ஒரு படம். ரஜினி இதுவரை நடித்துள்ள படங்களில் டாப் 10 படங்கள் என்ற வரிசையில் இந்தப் படத்திற்கு நிச்சயம் இடம் உண்டு. அதில் முதல் படமாக ‘பாட்ஷா’ இருக்கும், இரண்டாவது படமாக ‘படையப்பா’தான் இருக்கும்.

படையப்பா Vs நீலாம்பரி, இன்று வரை பேசப்படும் கதாபாத்திரங்கள். ஆறு படையப்பனாக ரஜினிகாந்த், நீலாம்பரியாக ரம்யா கிருஷ்ணன் ஒருவருக்கொருவர் எதிரும் புதிருமாக நின்று போட்டி போட்டு நடித்த படம். அந்தக் காலத்தில் ரஜினிகாந்த் படங்களில் அவரை எதிர்த்து வில்லனாக நடிப்பவர்களுக்கு ரஜினி ரசிகர்களிடம் எதிர்ப்புகள்தான் கிடைக்கும். ஆனால், அவரை எதிர்த்து நடித்த ரம்யா கிருஷ்ணனுக்கு பாராட்டுக்கள்தான் கிடைத்தது. இன்று வரையிலும் நீலாம்பரி கதாபாத்திரத்தை மிஞ்சிய ஒரு கதாபாத்திரம் ரம்யாவுக்கு கிடைக்கவில்லை.

ரஜினிகாந்த் பேசிய சில வசனங்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தினாலும் ‘என் வழி தனி வழி’ என அவர் பேசிய வசனமும், அவரைப் பார்த்து ரம்யா பேசிய, ‘வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் உன்னை விட்டுப் போகலை,’ என்ற வசனமும் இப்போதும் பல இடங்களில் குறிப்பிடப்பட்டு வருகின்றது.

படத்தில் சிவாஜி கணேசன், லட்சுமி என சீனியர் நடிகர்களுக்கும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைக் கொடுத்த படம். நாசர், மணிவண்ணன், ராதாரவி, பிரகாஷ்ராஜ், சித்தாரா, செந்தில், அப்பாஸ், ப்ரீதா விஜயகுமார், செந்தில், ரமேஷ் கண்ணா, வடிவுக்கரசி என ஒரு நட்சத்திரக் கூட்டமே நடித்த படம்.

ஏஆர் ரஹ்மான் இசையில் “என் பேரு படையப்பா, சுத்தி சுத்தி வந்தீக, கிக்கு ஏறுதே, மின்சார கண்ணா, வெற்றிக்கொடி கட்டு,” ஆகிய பாடல்கள் அனைத்துமே சூப்பர்ஹிட்டானவை.

ரஜினிகாந்த்துடன் சிவாஜி கணேசன் இணைந்து நடித்த கடைசி படம். இப்படத்திற்குப் பிறகு ‘பூப்பறிக்க வருகிறோம்,’ என்ற படத்தில் மட்டுமே நடித்தார் சிவாஜி.

கேஎஸ் ரவிக்குமார், ரஜினிகாந்த் கூட்டணியில் ‘முத்து’ படத்திற்குப் பிறகு இந்த ‘படையப்பா’ படமும் மாபெரும் வெற்றியைப் பெற்ற படமாக அமைந்தது.

இன்னும் 25 ஆண்டுகள் ஆனாலும் ‘படையப்பா’ படத்தின் படையப்பாவும், நீலாம்பரியும் பேசப்படுவார்கள்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours