கேரள மாநிலத்தின் கிராமம் ஒன்றில், தன் தாய் (ஷோபா மோகன்) மற்றும் கருவுற்றிருக்கும் தன் மனைவி ஸைனுவுடன் (அமலா பால்) வாழ்ந்து வருகிறார் நஜீப் முகமது (பிரித்விராஜ்). தன் வறுமையிலிருந்து விடுபடவும், தன் குழந்தையின் எதிர்காலத்திற்காகவும், தன் வீட்டை அடமானம் வைத்து, அப்பணத்தில் சவுதி அரேபியா நாட்டின் விசாவிற்கு ஏற்பாடு செய்கிறார்.
பல்லாயிரம் மலையாளிகள் போல கல்ஃப் மீதான பல கனவுகளோடு சவுதி அரேபியாவில் இறங்குகிறார் நஜீப். அரேபியர் ஒருவர் அவரை ஏமாற்றி, அழைத்துச் சென்று, நடு பாலைவனத்தில் ஆடுகளையும், ஒட்டகங்களையும் மேய்க்கும் அடிமையாக மாற்றுகிறார். உடலும், மனமும் ஒடுங்கிப் போன நஜீப், அந்த அடிமை சிறையிலிருந்தும், அனல் கக்கும் பாலைவனத்திலிருந்தும் எப்படித் தப்பித்தார் என்ற நீண்ட நெடிய போராட்டத்தைச் சமரசமின்றி சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் ப்ளெஸ்ஸி.
நஜீப் கதாபாத்திரத்திற்குத் தன்னைத் தேர்ந்தெடுத்த முடிவுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார் பிரித்விராஜ். படத்திற்காக உடலை உறுக்கிய விதத்தில் அர்ப்பணிப்பைக் காட்டுவதோடு, தன் உடல்மொழியால், பாலைவன வெட்கையையும், மனத்தின் ஆற்றாமையையும் ஆழமாகக் கடத்தவும் செய்கிறார். மொழிப் புரியாமல், தான் சொல்ல வருவதைச் சொல்ல முடியாமல் தவிக்கும்போது அந்தத் தவிப்பு நமக்கும் தொற்றிக் கொள்கிறது. பல காட்சிகளைத் தனியாளாகத் தாங்கி, கைதட்டல் பெறுகிறார். நஜீப்பைப் போல அடிமையாகும் ஹக்கீம் கதாபாத்திரத்தில் கே.ஆர்.கோகுல் கவனிக்க வைக்கிறார். தனிமையும், பாலையின் சூழலும் சேர்ந்து அவர் மனதைப் பிறழ்வாக்கும் இடங்களில் நம் மனதைக் கனக்க வைக்கிறார்.
+ There are no comments
Add yours