நடிகரும், அரசியல் தலைவருமான விஜயகாந்த் நேற்று காலை மரணமடைந்தார். அவரது மறைவையொட்டி நடிகர்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகை சபிதா ராய் விஜயகாந்த் தனக்குச் செய்த உதவிகள் குறித்து நெகிழ்ந்து பேசியிருக்கிறார்.
`நான் இந்த உலகத்துல உயிரோட இருக்கிறதுக்கும், பள்ளிப் படிப்பை முடிச்சதுக்கும் காரணமே விஜயகாந்த் சார் தான்! அத்தனை கம்பீரமாகப் பார்த்தவரை அப்படி பார்க்குறப்போ மனசு உடைஞ்சிடுச்சு!” என்றவாறு வழியும் கண்ணீரை துடைத்துக் கொண்டே விஜயகாந்த் குறித்த நினைவுகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

“இன்னைக்கு நான் எம்ஏ வரைக்கும் படிச்சிருக்கேன்னா அதுக்கு அடிப்படைக் காரணமே விஜயகாந்த் சார்தான். என் அம்மாவும் நடிகை. ஆண் துணை இல்லாம ரெண்டு பொண்ணுங்களை எங்க அம்மா ரொம்பவே கஷ்டப்பட்டு தான் வளர்த்தாங்க. சின்ன வயசுல டைபாய்டு காய்ச்சலினால் கடுமையாக பாதிக்கப்பட்டேன். அந்த சமயம் விஜயகாந்த் சார்தான் நடிகர் சங்கத்தலைவர். அவர்கிட்ட எங்க அம்மா, `என் பொண்ணுக்கு உடம்பு முடியல. மருத்துவம் பார்க்கவும் வசதியில்ல’னு சொல்லி அழுதுருக்காங்க. அவர் ஒரு இலவச மருத்துவமனை அந்த சமயத்தில் நடத்திட்டு இருந்திருக்கார். அந்த மருத்துவமனைக்குக் கொண்டு போகச் சொல்லி எனக்கு இலவசமா மருத்துவம் பார்க்க ஏற்பாடு பண்ணிக் கொடுத்திருக்கார். உடம்பு குணமாகி வீட்டுக்கும் போயிட்டோம்.
பிறகு ஒரு நாள் விஜயகாந்த் சார் எங்க அம்மாவைக் கூப்பிட்டு பிள்ளைங்களை எப்படி படிக்க வைக்குறீங்கன்னு கேட்டிருக்கார். அம்மா சொன்னதைக் கேட்டவர், `இனி நானே உங்க பொண்ணுங்களோட படிப்பு செலவை ஏத்துக்கிறேன்’ என சொல்லியிருக்கார். அப்ப நான் ஐந்தாவது படிச்சிட்டு இருந்திருக்கேன். அவர் உதவியால தான் படிச்சிட்டு இருக்கோம் என்பதே எங்க அம்மா சொல்லிதான் எனக்கே தெரிஞ்சது. அவர் இறந்த செய்தியைக் கேள்விபட்டதும் மனசு கணமாகிடுச்சு. அம்மா அவர் `கருப்பு வைரம்மா… கருப்பு எம்ஜிஆர் ஆக வாழ்ந்தார்’னு சொல்லி அழுதாங்க.
நான் தென்னிந்திய நடிகர் சங்க நியமன செயற்குழு உறுப்பினராகவும் இருக்கேன். நான், விஜய் சேதுபதி சார், கோவை சரளாம்மா, மன்சூர் அலிகான் சார்னு நாங்க எல்லாரும் ஒரே வேன்ல தான் சங்கத்தில் இருந்து கிளம்பிப் போனோம். வேன்ல கிளம்பினதுல இருந்து விஜயகாந்த் சாருக்கு இறுதி அஞ்சலி செலுத்துற இடத்துக்கு வருகிற வரைக்கும் நாங்க அவரைப் பத்தி தான் பேசிட்டு வந்தோம். ஒவ்வொருத்தரும் அவரைப் பற்றிய விஷயங்கள் எல்லாம் பகிர்ந்துகிட்டாங்க. அதையெல்லாம் கேட்கும்போது அவ்வளவு பிரம்மிப்பா இருந்துச்சு. ஒரு நல்ல மனிதரை இழந்திருக்கோம்! அவருடைய கம்பீரமும், ஆளுமையும் எந்த நடிகருக்கும் சரி, எந்த தலைவருக்கும் சரி வராது. இனி வரவும் முடியாது. அவருக்கு நிகர் அவர்தான்! நடிகர் சங்கத்தை மீட்டுக் கடன் முழுவதையும் அடைச்சிருக்கார். அவர் மறைவு நிச்சயம் அனைவருக்கும் பேரிழப்பு!” என்றார்.
+ There are no comments
Add yours