எதிர்நீச்சல் `ஆதி குணசேகரன்’ கதாபாத்திரத்திற்கென தனியொரு ரசிகர் பட்டாளமே இருந்தது. அதில் நடித்த நடிகர் மாரிமுத்து மறைந்த பின்னர், தற்போது அந்தக் கதாபாத்திரத்தில் எழுத்தாளர் வேலராமமூர்த்தி நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால் ஆரம்பத்திலேயே இந்தத் தொடரில் அவரை நடிப்பதற்காகக் கேட்ட போது தயக்கம் காட்டினார். ஆனாலும், இறுதியில் நடிக்க ஒப்புக் கொண்டார்.
வேல ராமமூர்த்தி அந்தத் தொடரில் என்ட்ரியானதும் அவர் மாரிமுத்துவைப் போல் நடிக்கவில்லை எனத் தொடர்ந்து அவரது நடிப்பு குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் வந்த வண்ணம் இருந்தன. ‘எதிர்நீச்சல்’ ரசிகர்கள் அவரை மாரிமுத்துவுடன் ஒப்பிட்டு கருத்துகளைப் பகிர்ந்து வந்தனர்.
மாரிமுத்து எப்படி இந்தக் கதாபாத்திரத்திற்குக் கூடுதல் மெனக்கெடல்கள் செய்தாரோ அதே போன்றுதான் வேல ராமமூர்த்தியும் மெனக்கெட்டிருக்கிறார். `எம்மா ஏய்’ என்பது மாரிமுத்துவின் ட்ரேட் மார்க்கானது போல வேல ராமமூர்த்தியின் ட்ரேட் மார்க் டயலாக் ஆன `இளந்தாரிப்பயலுக’ வசனமும் இந்தத் தொடரில் இடம் பெற்றது. `எம்மா ஏய்’யிலிருந்து `இளந்தாரிப்பயலுக’விற்கு ஆதி குணசேகரன் ரசிகர்களால் சட்டென மாற இயலவில்லை. அதற்குச் சில காலங்கள் ஆகும் என்பதை வேல ராமமூர்த்தியுமே நிச்சயம் புரிந்து வைத்திருப்பார்.
இதனிடையே ஆதி குணசேகரனாக அவர் என்ட்ரி ஆன ஓரிரு நாள்களிலேயே அவர் கைதாகி சிறைக்குச் செல்வது போலக் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. இனி, ஆதி குணசேகரனின் தம்பிகளைச் சுற்றியும், வீட்டு மருமகள்களைச் சுற்றியுமே கதை ஓட்டம் நகர இருக்கிறது. அந்தத் தொடரின் நாயகியான ஜனனியின் தங்கைக்குத் திருமணம் செய்து வைப்பதை நோக்கித்தான் தற்போதைய கதை ஓட்டம் இருக்கும் எனத் தெரிகிறது.
வேல ராமமூர்த்தி தொடர்ந்து படங்களில் பிஸியாக இருப்பதால்தான் அவரது கேரக்டர் ஜெயிலுக்குப் போனது போலக் காட்டிவிட்டார்கள். இது ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தை டம்மியாக்கியது போல் உள்ளது எனப் பல்வேறு விதமாக `எதிர்நீச்சல்’ ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.
வேல ராமமூர்த்தி கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பாரிஸில் இருப்பதாகப் பதிவிட்டிருந்தார். அதன் மூலம் அவர் படத்தில் பிஸியாக இருப்பதால்தான் தற்போது தொடரில் அவரால் நடிக்க முடியவில்லை என்பது தெரிகிறது. தேதி பிரச்னையின் காரணமாகவே ஆதி குணசேகரன் கைதாகியது போலக் காட்டப்பட்டிருப்பதும் புரிகிறது.
ஆனாலும், ஆதி குணசேகரனுக்காகவே தொடரை ரசித்த ரசிகர்களால் அவர் இல்லாததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்தக் கதாபாத்திரத்தின் நக்கலும், நையாண்டியும் மக்கள் ரசித்தவை என்பதால் அவர்களால் அந்தக் கதாபாத்திரம் இல்லாமல் தொடர் நகர்வதை ரசிக்க முடியவில்லை. இனி முழு நீளமாக, முக்கியமான கதாபாத்திரமாக ஆதி குணசேகரன் வருவாரா என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.
ஆதி குணசேகரன் கதாபாத்திரம் தொடர்பான உங்களுடைய கருத்துகளையும் மறக்காம கமென்ட் பண்ணுங்க!
+ There are no comments
Add yours