சென்னை: “ரீ-ரெக்கார்டிங் முன்பு படம் சுமாருக்கும் மேலாக (above avarage) இருந்தது. பின்பு அனிருத் அதனை தூக்கி நிறுத்திவிட்டார்” என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், “கலாநிதி மாறன் கொடுத்த காரில் தான் இங்கு வந்தேன். பணக்காரனாகிவிட்டேன் என்ற உணர்வு இப்போதுதான் எனக்கு வந்தது. உண்மையாகவே அந்தக் காரில் உட்கார்ந்து வரும்போது அப்படி இருந்தது. ஒரு படம் வெற்றியடைந்துவிட்டால் அதில் வேலை பார்த்தவர்களுக்கு ஒரு தயாரிப்பாளர் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு கலாநிதிமாறன் முன்னுதாரணமாக இருக்கிறார். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
‘ஜெயிலர்’ படம் பார்த்த பிறகு பேசிக்கொண்டிருந்தோம். வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் ரீ-ரெக்கார்டிங் முன்பு படம் சுமாருக்கும் மேலாக (above avarage) இருந்தது. அனிருத் படத்தை தூக்கி நிறுத்திவிட்டார். எப்படியாவது எனக்கு ஹிட் கொடுக்கவேண்டும், நெல்சனுக்கு ஹிட் கொடுக்க வேண்டும் என மெனக்கெட்டார் அனிருத். கல்யாணப் பெண் அலங்காரத்துக்கு முன் எப்படியிருக்கும்… அப்படியிருந்த ‘ஜெயிலர்’ படத்தை அலங்காரத்துக்கு பின் மணப்பெண் எப்படியிருக்குமோ அப்படி மாற்றிக்காட்டினார்.
படத்தின் வெற்றியை 5 நாட்கள் தான் கொண்டாடினேன். அதன் பிறகு இதைவிட ஒரு பெரிய ஹிட் கொடுக்க வேண்டுமே மக்கள் எதிர்பார்ப்பார்களே என்ற டென்ஷன் தான் எனக்குள் தற்போது இருக்கிறது. படத்தை பார்த்துவிட்டு கலாநிதிமாறன், இது 2023-ம் ஆண்டின் ‘பாட்ஷா’ என புகழ்ந்தார். அடுத்த ஹிட் கொடுக்க வேண்டிய டென்ஷன் எனக்கு மட்டுமல்ல நெல்சனுக்கும் கூட அப்படித்தான். இதைத் தாண்டிய வெற்றியை பதிவு செய்ய வேண்டும்” என்று ரஜினி பேசினார்.
+ There are no comments
Add yours