இரண்டாம் பாதியில் உள்ள பாதி காட்சிகளை யார் வெட்டி கடத்தினார்கள் என்று கேட்கும் அளவிற்கு துண்டுதுண்டாக, லாஜிக் ஓட்டைகளால் எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர். எல்லா காட்சிகளும் தொடர்பற்று நம்பகத்தன்மையற்றே நகர்கின்றன. ‘இது எப்படி?’, ‘இவருக்கு எப்படித் தெரியும்?’, ‘அவர் என்ன ஆனார்?’ எனப் படம் பார்க்கிறோமா குவிஸ் போட்டியில் விளையாடுகிறோமா என்ற குழப்பமே எஞ்சி நிற்கிறது.
செம்மர கடத்தலில் அமைச்சர் தொடங்கி, வனத்துறை, காவல்துறை, ரவுடிகள் வரையுள்ள தொடர்பை விளக்கும் காட்சிகளும், வனத்துறையினரிடம் அப்பாவி தமிழர்கள் சிக்கிப் பலியாகும் காட்சிகளும் நம் மனதில் அழுத்தமாகப் பதிகின்றன. இதற்குத் தொழில்நுட்ப ரீதியாக திரையாக்கம் கைகொடுத்திருக்கிறது.
செம்மரத்தாலான பொருள்கள் சிறு உடல் உபாதைகள் தொடங்கி புற்றுநோய் வரை தடுப்பதாகவும், அணுக்கதிர் வீச்சையே தடுக்கும் வல்லமையுள்ளதாகவும் தொடக்கத்தில் அனிமேஷன் காட்சிகளால் பரப்புரை செய்யப்படுகிறது. ஆனால் இப்பரப்புரைக்கும் இந்தக் கடத்தல் குற்றப்பின்னணியைப் பேசும் கதைக்கருவிற்கும் உள்ள தொடர்பு என்ன என்பதைக் கடைசி வரை விளக்கவில்லை. இந்தக் கருத்துகளுக்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்களும் இருப்பதாகத் தெரியவில்லை.
+ There are no comments
Add yours