தூத்துக்குடி:
திருச்செந்தூர் நகராட்சி பகுதியில் கழிவுகளை அகற்ற பயன்படுத்தப்படும் நகராட்சி உரிமம் இல்லாத செப்டிக் டேங்க் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று நகராட்சி ஆணையாளர் வேலவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சி பகுதியில் கழிவுகளை அகற்ற பயன்படுத்தப்படும் நகராட்சி உரிமம் இல்லாத செப்டிக் டேங்க் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று நகராட்சி ஆணையாளர் வேலவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: –
சட்ட திருத்தம் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மலக்கசடு மற்றும் கழிவு மேலாண்மை தேசிய கொள்கையின் படி கழிவுநீர் மற்றும் மலக்கசடுகளை வாகனங்கள் மூலம் சுத்தம் செய்தல் போன்ற பணிகளை ஒழுங்குபடுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த பணிகளுக்காக இயக்கப்பட்டு வருகிற லாரிகள் மற்றும் டிரெய்லர்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த கடந்த 2022-ம் ஆண்டு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி வாகன உரிமையாளர்கள் தகுந்த ஆவணங்களுடன் ரூ. 2ஆயிரம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
இதையடுத்து நகராட்சி மூலம் 2 ஆண்டுகளுக்கு உரிமம் வழங்கப்படும். உரிமம் பெற்ற பின், உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பாதுகாப்பாக அந்த வாகனங்களை இயக்க வேண்டும். அதனால், செப்டிக் டேங்க் கழிவு மற்றும் கழிவு நீர் எடுக்கும் வாகனங்களுக்கு உரிமையாளர்கள் உரிமம் பெற்று இயக்க வேண்டும். உரிமம் இல்லாமல் இயங்கும் வாகனங்கள் கண்டறியப்பட்டால் எவ்வித முன்னறிவிப்பு இன்றி நகராட்சியால் பறிமுதல் செய்யப்படும். மேலும் வாகனங்களின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றம் மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours