மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் உள்ள வெள்ளிமலையின் அடிவாரமான கீழ் வெள்ளிமலை கிராமத்தில், தன் மகள் அஞ்சு கிருஷ்ணாவுடன் வாழ்ந்து வருகிறார் சித்த வைத்தியரான சூப்பர் குட் சுப்பிரமணி. அவரிடம் மருத்துவம் பார்க்க மாட்டோம் என்று அடம்பிடிப்பதோடு, அவர் தயாரிக்கும் மருந்துகளையும் கிண்டல் செய்கிறார்கள் அந்தக் கிராமத்தினர். இந்த அவமானங்களை எல்லாம் பொறுத்துக்கொள்ளும் சுப்பிரமணி, ஒருநாள் இந்தக் கிராம மக்கள் தன்னையும் தன் மருந்துகளின் மதிப்பையும் உணர்வார்கள் என்று நம்பிக்கையோடு இருக்கிறார்.
இந்நிலையில், அந்த மலைக் கிராமத்தில் ஒரு புது விதமான நோய் ஒன்று பரவ, மொத்த கிராமத்தினரும் துடிதுடித்துப் போகிறார்கள், சிலர் செத்து மடிகிறார்கள். அத்தருணத்திலும், சுப்பிரமணியின் சித்த மருந்துகளை ஏற்க மறுக்கிறார்கள். அப்படி என்ன அவர்மீது கிராமத்தினருக்குக் கோபம், அந்த நோய் குணமானதா, யாரால் குணமானது, இறுதியில் சுப்பிரமணியைக் கிராமத்து மக்கள் ஏற்றுக்கொண்டார்களா என்பதை எதார்த்தமான கிராமத்தையும் மக்களையும் கொண்டு, சித்த மருத்துவத்தின் பரப்புரை படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஓம் விஜய்.

நகைச்சுவை கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் மட்டுமே நடித்து வந்த ‘சூப்பர் குட்’ சுப்பிரமணி, இந்தப் படத்தில் கதாநாயகன் நிலைக்கு ஈடான முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் பொறுப்புக்கு ஓரளவு நியாயமும் சேர்த்திருக்கிறார். கேலிக் கிண்டல்களுக்கு ஆளாகி வெட்கப்படும் இடங்களிலும், பதிலுக்கு அவர்களைக் கலாய்க்கும் இடங்களிலும், தன் குறும்புத்தனத்தால் ஸ்கோர் செய்கிறார். ஆனால், மற்ற உணர்வுபூர்வமான காட்சிகளில் வெறுமன ‘ஐயோ… அம்மா…’ என அழுவதை மட்டுமே ஒரே வேலையாகச் செய்கிறார். இதனால், முக்கிய தருணங்களில் அவரின் வைத்தியர் கதாபாத்திரம் பலவீனமடைகிறது.
+ There are no comments
Add yours