"அப்பாவின் மரணம் குறித்து வதந்திகளைப் பரப்பவேண்டாம். நடந்தது இதுதான்!"- மயில்சாமியின் மகன் விளக்கம்

Estimated read time 1 min read

தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மயில்சாமி 19-2-23 அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து திரைத்துறையைச் சேர்ந்த பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

அன்று முழுவதும் அவரைப் பற்றிய செய்திகள்தான் வலைதளங்களை ஆக்கிரமித்திருந்தன. சினிமாவில் அவருடன் பணியாற்றியவர்களும், அவரது நெருங்கிய நண்பர்களும் மயில்சாமி பற்றிய நினைவுகளை ஊடகங்களில் பகிர்ந்து வந்தனர்.

மயில்சாமி மகன்

ஆனால், அதேசமயம் சில சமூக வலைதளங்களில் மயில்சாமியின் இறப்பைக் குறித்த வதந்திகளும் பரவிய வண்ணம் இருந்தன. இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மயில்சாமியின் குடும்பத்தினர், “அப்பா இறப்பைப் பற்றியும் அவரைப் பற்றியும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

இது பற்றிக் கூறிய அவரது மூத்த மகன், “அப்பாவின் இறுதிச்சடங்கு வேலைகளில் பிஸியாக இருந்தோம். அதனால் வலைதளங்களில் என்ன நடக்கிறது என்று கவனிக்கவில்லை. இரண்டு நாள்களுக்குப் பின் இப்போதுதான் போனை எடுத்துப் பார்த்தேன். பலர் அப்பாவைப் பற்றி நெகிழ்ச்சியாகப் பேசியிருந்தனர். அவர்களுக்கு எங்களின் நன்றி. ஆனால், அதேசமயம் சிலர் வலைதளங்களிலும், யூடியூப்பிலும் அப்பா பற்றியும், அவரது இறப்பு பற்றியும் தவறான தகவல்களைப் பரப்பி வருகிறார்கள்.

சிவராத்திரி அன்று படத்தின் டப்பிங் வேலைகளை முடித்துவிட்டு வந்த அவர், அன்று இரவு கேளம்பாக்கத்தில் உள்ள மேகநாத சுவாமி திருக்கோயில் சென்றார். அவருடன் நானும், அம்மாவும் சேர்ந்து சென்றிருந்தோம். பின்னர், வடபழநி கோயிலுக்கு வந்து ட்ரம்ஸ் சிவமணியுடன் சேர்ந்து சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மகிழ்ச்சியாக இருந்தார்.

மயில்சாமி

அதன்பிறகு, மூன்று மணியளவில் வீடு திரும்பினோம். வரும் வழியில் காரில் எல்லோருடனும் நன்றாகவே பேசிக்கொண்டு வந்தார். வீடு வந்தவுடன் சாப்பிட்டார். அதன்பிறகு தூங்குவதற்குச் சென்றவர் லேசாக நெஞ்சு வலிக்கிறது, மூச்சு விடமுடியவில்லை என்றார். உடனே அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால், செல்லும் வழியிலேயே அப்பா என் மீது சாய்ந்துவிட்டார். மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் இறந்துவிட்டதாகக் கூறினர். இருப்பினும், உறுதிப்படுத்துவதற்காக ராமச்சந்திர மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு அவர் இறந்ததை உறுதி செய்தனர். இதுதான் அன்று நடந்தது. தவறான செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், “தேவை ஏற்பட்டால் தவறான செய்திகளை வெளியிடுவோர் மீது சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுப்போம்” என்று கூறினார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours