பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி இன்று மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மயில்சாமியின் உடல் இறுதி அஞ்சலிக்காக சாலிகிராமத்தில் அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் திரையுலகினர், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் நடிகரும், தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது பேசிய அவர், “ மயில்சாமி அண்ணனின் இழப்பு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், தமிழ் திரையுலகினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

`பொதுவாக என் மனசு தங்கம்’, அதன் பின் கடைசியாக `நெஞ்சுக்கு நீதி’ படத்தில் என்னுடன் நடித்தார். 50 நாட்கள் படப்பிடிப்பு என்றால் 40 நாட்கள் என் கூடவே இருந்தார். எனக்கு ஒரு அண்ணன் மாதிரிதான். 10 நாட்களுக்கு ஒரு முறை தொலைபேசியில் அழைத்துப் பேசுவார். மற்றவர்களுக்கு உதவி செய்ய கேட்பாரே தவிர ஒரு முறை கூட சொந்த விஷயத்திற்காக உதவி கேட்டதில்லை. எப்போதும் பொதுமக்களுக்காக கோரிக்கை வைக்கக் கூடியவர். ரொம்ப அன்பாக பழகக்கூடியவர். அவருடைய இறப்பு மிகப்பெரிய இழப்பு” என்று தெரிவித்திருக்கிறார்.
+ There are no comments
Add yours