‘நீ இல்லையென்றால் செத்து விடுவேன்’ என்று குடித்து சாலையில் புரண்டு எமோஷனல் பிளாக்மெயில் விடுக்கிறான் ராஜா. ‘ஸ்டாக்ஹோம் ஸிண்ட்ரோம்’ மாதிரி இம்மாதிரியான கொனஷ்டைகளுக்கு எளிதில் கவிழ்ந்து விடுவது நாயகிகளின் வழக்கம். (ஏனென்றால் அவர்கள் அவ்வாறே அபத்தமாகச் சித்திரிக்கப்படுகிறார்கள்). அனுதாபத்தில் விழும் நாயகி பிறகு காதலிலும் விழுகிறாள். ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கி தன் ஆசையைத் தீர்த்துக் கொள்கிறான் ராஜா. கர்ப்பமடையும் ராதா, திருமணத்துக்காக வலியுறுத்தும் போது ‘இதற்கு என்ன சாட்சி?’ என்று எகத்தாளமாகப் பேசுகிறான் ராஜா.
வெகுண்டெழும் ராதா, தன்னைப் போல் வேறு எந்தப் பெண்ணும் இப்படிப் பாழாகக்கூடாது என்னும் நோக்கத்தில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறாள். இதற்காக ‘சகுந்தலா தேவி’ என்கிற, பெண்ணுரிமைக்காகப் பாடுபடுகிற வழக்கறிஞரின் உதவியைக் கோருகிறாள். ராஜாவின் தந்தையும் ஒரு பிரபலமான வக்கீல். எனவே இந்தப் பரபரப்பான வழக்கு விசாரணைக்கு வருகிறது.
‘ரோட் சைட் ரோமியோ’ ராஜாவாக மோகன்
ராஜாவாக மோகன். ராதாவாக பூர்ணிமா. ஒரு நாயகனும் நாயகியும் நடித்து தொடர்ச்சியாக ஹிட் அடித்தால், அந்த ஜோடியை ராசியாகக் கருதுவது சினிமாவின் ஒரு மரபு. அந்த வகையில் இந்த ஜோடி பல வெற்றித் திரைப்படங்களில் நடித்திருக்கிறது. ஒரு ‘நைஸ் ஜென்டில்மேன்’ பாத்திரத்தில் நடித்து ஏராளமான இளம்பெண் ரசிகர்களைப் பெற்ற மோகனுக்கு இதில் சற்று எதிர்மறையான பாத்திரம். பூர்ணிமாவைத் துரத்தித் துரத்திக் காதலித்து, தன் நோக்கம் நிறைவேறியவுடன் பணக்காரத் திமிரில் எகத்தாளமாகப் பேசி ஏமாற்றுவார். பார்வையாளர்களின் எரிச்சலைச் சம்பாதிப்பார்.
அழகு என்பதைத் தாண்டி பூர்ணிமா ஒரு நல்ல நடிகை என்பதற்கான தடயங்கள் இந்தப் படத்தின் சில காட்சிகளிலிருந்தன. தான் வஞ்சிக்கப்பட்டதை எண்ணி மனம் புழுங்குவது, குடும்பத்தின் எதிர்ப்பால் மனஉளைச்சல் அடைவது, தன் வாழ்க்கையைக் குலைத்தவனை சமூகத்துக்கு அடையாளம் காட்டுவதற்காக மனஉறுதியுடன் இருப்பது என தன் பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருந்தார்.
+ There are no comments
Add yours