உற்சாகத்தில் இருக்கிறார் தனுஷ். தெலுங்கு, தமிழில் உருவாகியுள்ள `வாத்தி’ படம் அடுத்த மாதம் வெளியாகிறது. இதனையடுத்து `கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பிலும் கலந்துகொண்டு வருகிறார். இந்நிலையில்தான் அவரது 50-வது படத்தைத் தயாரிக்கவிருப்பது சன் பிக்சர்ஸ் என்று அறிவித்துள்ளனர்.
கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடித்த ‘சாணிக்காயிதம்’ படத்தை எடுத்த அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் படம் ‘கேப்டன் மில்லர்’. இதில் கன்னட ஸ்டார் சிவராஜ் குமார் முக்கியமான ரோலில் நடிக்கிறார். இவர்களுடன் பிரியங்கா அருள் மோகன், சுந்தீப் கிஷன், போஸ்வெங்கட், ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், குமரவேல், டேனியல் பாலாஜி, நாசர், பால சரவணன் எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.
ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவையும், ஜி.வி.பிரகாஷ் இசையையும் கவனித்து வருகிறார்கள். இரண்டு ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இப்போது குற்றாலம், தூத்துக்குடி ஏரியாக்களில் நாளை மீண்டும் படப்பிடிப்பு தொடங்குகிறது. தொடர்ச்சியாக அங்கே 80 நாள்கள் ஷூட்டிங் நடப்பதுடன், அந்த ஷெட்யூலோடு முழுப்படமும் நிறைவடைகிறது. இதற்காக தனுஷ் நாளை குற்றாலம் செல்லவிருக்கிறார்.
இந்நிலையில் தனுஷின் ‘D50’ படம் குறித்து விசாரித்தேன். ‘பவர் பாண்டி’க்கு பிறகு தனுஷ் இயக்கும் படமிது. இயக்குநராக முதன்முதலாக ஒரு ஃபீல்குட் படத்தை இயக்கியவர் இப்போது ‘புதுப்பேட்டை’ சாயலில் ஒரு படத்தை இயக்குகிறார். ஆனால் இதில் விஷ்ணு விஷால், காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார்கள் என்ற தகவல் இன்னும் உறுதியாகவில்லை. இதற்கிடையே படத்தின் மோஷன் போஸ்டருக்காக சென்னையில் போட்டோஷூட் நடந்து முடிந்திருக்கிறது. அதில் தனுஷ் மட்டுமே பங்கேற்றிருக்கிறார். ‘கேப்டன் மில்லர்’ படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு தனுஷ் முழுவீச்சில் ‘D50’ல் இறங்குகிறார்.
தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் தொழில்நுட்ப குழுவினர் இதிலும் கைகோக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார் என்கிறார்கள்.
+ There are no comments
Add yours