பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து செல்ல திண்டாட்டம்.! அன்னுாரில் தான் இந்த பரிதாபம்.!!

Estimated read time 1 min read

அன்னுார்:

தினமும் பல ஆயிரம் மக்கள் வந்து செல்லும் அன்னுார் பஸ் ஸ்டாண்ட் அவல நிலையில் உள்ளது.

கோவை– சத்திக்கும், அவிநாசி-மேட்டுப்பாளையத்துக்கும், மையமாக அன்னுார் உள்ளது. அன்னுார் பஸ் ஸ்டாண்டிற்கு தினமும் பல ஆயிரம் மக்கள் வந்து செல்கின்றனர். கர்நாடகா செல்லும் பஸ்கள் உள்பட, 210 பஸ்கள் தினமும் சராசரியாக, 6 முறை அன்னுார் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து செல்கின்றன. பல ஆயிரம் பேர் வந்து சென்றும் பஸ் ஸ்டாண்ட் முறையாக பராமரிக்கப்படாததால் மக்கள் அவதிப்படுகின்றனர். அன்னுார் பஸ் ஸ்டாண்டில், பஸ்கள் உள்ளே வரும் பகுதியில் பல இடங்களில் சிமென்ட் தரை தளம் பெயர்ந்து குழிகள் ஏற்பட்டுள்ளன. மழை பெய்யும் சமயங்களில் குழிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. பொதுமக்கள் உட்காரும் இருக்கைகள் உடைந்து மோசமான நிலையில் உள்ளன.

பயணிகள் காத்திருக்கும் பகுதி சுகாதாரமற்று உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் வெளியே செல்லும் மேட்டுப்பாளையம் ரோடு வளைவில் பல கடைகள், 20 அடி துாரம் வரை ஆக்கிரமித்து உள்ளன. இதனால், மேட்டுப்பாளையம் சாலையில் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் எளிதில் செல்ல முடியாத நிலை உள்ளது. இத்துடன் மேட்டுப்பாளையம் மற்றும் அவிநாசி செல்லும் வாகனங்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் செல்லாமல், பஸ் ஸ்டாண்டில்நுழைவாயிலில் நின்று பயணிகளை ஏற்றி இறக்குவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நுழைவாயில் பகுதியில் ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன.

பஸ் ஸ்டாண்டில் கோவை செல்லும் பயணிகள் மேற்கூரை இல்லாததால் வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் அவதிப்படுகின்றனர். ‘பேரூராட்சி அதிகாரிகள் பஸ்ஸ்டாண்டை துாய்மையாக பராமரிக்கவும், சேதமடைந்த தரைத்தளத்தை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பஸ்கள் பஸ்ஸ்டாண்டிற்குள் செல்லாமல் ரோட்டில் நின்று பயணிகளை ஏற்றி இறக்குவதை போலீசார் தடைசெய்ய வேண்டும், ‘ என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் கூறுகையில், “கடைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளது குறித்து நெடுஞ்சாலை துறையிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பஸ்டாண்டில் தரைதளத்தில் கான்கிரீட் போடவும் துாய்மையாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours