“ஒற்றைத் தலைமைதான் பலரது எண்ணம்” – முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு

Estimated read time 1 min read

தூத்துக்குடி:

ஒற்றைத் தலைமை வேண்டுமென்பதே பலரின் எண்ணமாகவும், கருத்தாகவும் இருப்பதாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி  வடக்கு மாவட்ட அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு முன்னிலையில் நடந்தது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒற்றைத் தலைமை வேண்டும் என்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்ப்ட்ட்டது.

கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜு, “ கட்சியில் மாற்றம் வர வேண்டும் என ஏற்கனவே சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தோம். அதேபோல் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் ஒற்றை தலைமைதான் வேண்டும் என கருத்துக் கூறியிருந்தோம். அதிமுக என்றுமே ஒற்றை தலைமையின் கீழ்தான் இருந்து வந்துள்ளது.

தமிழகத்தில் அதிக வாக்கு வங்கியுடன் எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட்டுவருகிறது. தமிழகத்தில் எந்தக் கட்சியாக இருந்தாலும் அது ஒற்றைத்  தலைமையில்தான்  செயல்பட்டு வருகிறது. இரட்டைத் தலைமை பல்வேறு பிரச்னைகளை சந்தித்துவருவதால் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் ஒற்றைத் தலைமை வேண்டும் என்கின்றனர்.

இங்கு நடந்த செயற்குழு கூட்டத்திலும்  கலந்துகொண்டவர்கள் ஒற்றைத் தலைமையைத்தான் விரும்புகின்றனர். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டால் அதற்கு ஆதரவு அளிக்கப்படும்.

ஒற்றைத் தலைமை வந்தால் பெரிய இயக்கத்தை காக்க முடியும்.பொதுக்குழு உறுப்பினர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு 30 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர் அவர்கள் அனைவருமே ஒற்றைத் தலைமையை விரும்புகின்றனர்.

பொதுக்குழுவில் என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ அதுதான் இறுதி முடிவு. தற்காலிக பொதுச்செயலாளராகத்தான் சசிகலாவை நியமித்தோம். அதை பொதுக்குழு ஏற்றுக்கொண்டது என்பதில் மாற்று கருத்து இல்லை.

ஆனால், அதே பொதுக்குழுதான் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது. அதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். சசிகலா இப்போது கட்சியிலேயே இல்லை. அவரை ஓபிஎஸ் சந்திக்கமாட்டார்” என்றார்.

                                                                                                                                     – க. விக்ரம் 

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours