பாபநாசம் பட பாணியில் நடந்த கொலை: உளுந்தூர்பேட்டையில் வடமாநில இளைஞர் கொலை..!

Estimated read time 0 min read

உளுந்தூர்பேட்டை:

உளுந்தூர்பேட்டை அருகே வடமாநில இளைஞர் அடித்தும் கழுத்தை நெரித்தும் கொலை செய்யப்பட்டு வீட்டில் புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் கமோல் பகுதியைச் சேர்ந்தவர் பவன்குமார். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் டைல்ஸ் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். மாம்பாக்கம் கிராமத்தில் ரமேஷ் என்பவர் புதியதாக கட்டி வரும் அடுக்குமாடி வீட்டில் வழக்கம் போல டைல்ஸ் பதிக்கும் பணிக்காக கடந்த 3ஆம் தேதி வேலைக்கு வந்துள்ளார் பவன்குமார்.

அங்கு வேலை முடிந்ததால், அனைவரும் சொந்த ஊர் திரும்பிய நிலையில், பவன்குமார் மட்டும் அவரது ஊருக்கு திரும்பவில்லை. பவன்குமாரின் உறவினர் சோனாசைனி என்பவர் பவன்குமாரை தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் அணைக்கப் பட்டு இருந்தது. சில நாட்கள் காத்திருந்தும் அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர், மாம்பாக்கம் கிராமத்துக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு எங்கு தேடியும் பவன்குமார் கிடைக்கவில்லை.

இதனையடுத்து அவர் கடைசியாக வேலைக்கு சென்ற வீட்டில் சென்று பார்த்த போது, அங்கு வீட்டின் முன்பக்கத்தில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த சோனாசைனி வீட்டை சுற்றிப்பார்த்துள்ளார். அப்போது பவன்குமாரின் உடை ரத்தம் படிந்து கிடந்துள்ளது. இதுகுறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டின் முன் பக்கத்தில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அந்த இடத்தை தோண்டிப் பார்த்துள்ளனர்.

அதில் பவன் குமார் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து பவன்குமார் உடலை கைப்பற்றிய போலீசார் அதனை ஆய்வு செய்தபோது தலையில் பலமாக அடித்தும் , கழுத்தை அறுத்தும் அவர் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பவன்குமார் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்றும் அவரை யார் கொலை செய்து புதைத்தது என்றும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதியதாக கட்டி வரும் வீட்டில் டைல்ஸ் போடும் வேலைக்கு வந்த வடமாநில இளைஞர் அடித்துக் கொலை செய்து வீட்டிற்குள் புதைக்கப்பட்ட சம்பவம் அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் படத்திலும், கமல்ஹாசன் தனது மகளால் கொலை செய்யப்பட்ட இளைஞரை புதிதாக கட்டப்பட்டு வரும் காவல்நிலையத்தில் புதைத்து மறைத்திருப்பார். அதேபோல இந்த வழக்கிலும் இளைஞர் கொல்லப்பட்டு புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours