அண்மையில் கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட பிளஸ் ஒன் மாணவி உயிரிழந்த சம்பவத்தின் தாக்கமே இன்னும் குறையவில்லை.
அப்படியிருக்க, கேரளாவின் திருவனந்தபுரம் அருகே நெடுமங்காடு பகுதியில் மற்றொரு ஹோட்டலில் பிரச்சனை எழுந்துள்ளது.
கேரளாவின் திருவனந்தபுரம் அருகே அமைந்துள்ள நெடுமங்காட்டை அடுத்த பூவத்தூர் பகுதியில் ப்ரியா என்பவர் வசித்து வருகிறார்.
அவர் தனது வீட்டின் அருகிலிருக்கும் புரோட்டா கடையில் புரோட்டா பார்சல் வாங்கியுள்ளார். அதனை பெற்றுக்கொண்டு வீட்டிற்கு எடுத்துச்சென்று பிரித்து பார்த்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த பார்சலை கட்ட பயன்படுத்திய காகிதத்தினுள்ளே பாம்பு உரித்த தோல் இருந்துள்ளது. பதறிய ப்ரியா உடனடியாக நெடுமங்காடு போலீசாருக்கும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கும் இது குறித்து தகவல் தெரிவித்தார்.
தகவல் கிடைத்த அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் அதிகாரிகள் விரைந்து சென்று புரோட்டா பார்சலை கைப்பற்றி ஆய்வு செய்தனர். மேலும் ஹோட்டலுக்கு நேரில் சென்று உணவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவு பொருட்களை சுகாதாரமான முறையில் விநியோகம் செய்யவில்லை என்றும், பாதுகாப்பு அம்சங்களை முறையாக கடைபிடிக்கவில்லை என்றும் கூறி அந்த ஹோட்டலுக்கு சீல் வைத்தனர்.
இதற்கிடையே பாம்பு தோல் உள்ள புரோட்டா பார்சலின் புகைப்படம் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது.
புரோட்டா பார்சலில் பாம்பு தோல் இருந்ததை சிலர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
இவ்வாறு உணவு சுகாதாரம் சீர்கெட்டு விளங்குவதால் கேரள மக்கள் சற்று பீதியில் உள்ளனர். மருத்துவ நிபுணர்களும் வெளியில் உணவு எடுத்துக்கொள்வதைக் குறைத்துக்கொள்ளுங்கள் என்று பரிந்துரைக்கின்றனர்.
+ There are no comments
Add yours