உறவுக்கு அழைத்த கள்ளக்காதலனை கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை..!

Estimated read time 1 min read

தருமபுரி:

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பெரிய மஞ்சவாடி பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். இவருடைய மனைவி அனிதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும், அதே ஊரை சேர்ந்த அஜித்குமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இதுபற்றி அறிந்த கணவர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் 2 பேரையும் கண்டித்து அறிவுரை கூறினார்கள்.

இதைத் தொடர்ந்து அஜித்குமார் ஓசூருக்கு வேலைக்கு சென்றார். அதன்பின் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவர் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக பெரிய மஞ்சவாடிக்கு வந்தார். அப்போது அனிதாவின் வீட்டிற்கு சென்ற அவர் அங்கு தனியாக இருந்த அனிதாவை வலுக்கட்டாயமாக உல்லாசத்திற்கு அழைத்தார். அப்போது மறுப்பு தெரிவித்த அனிதா வீட்டில் இருந்து வெளியேறுமாறு எச்சரித்தார்.

ஆனால், அங்கிருந்து வெளியேற மறுத்த அஜித்குமார் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அனிதா அருகே இருந்த கிரைண்டர் கல்லால் அஜித்குமாரின் தலையில் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

இதுதொடர்பாக பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அனிதாவை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கு தருமபுரி மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் முடிவில் அனிதா மீதான கொலை குற்றச்சாட்டு உறுதியானது. இதையடுத்து அனிதாவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி மோனிகா தீர்ப்பளித்தார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours