தஞ்சாவூர்:
பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் வரலாற்று ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அந்த ஆசிரியர் நல்லவர். அவர் மீது வேண்டுமென்றே பாலியல் புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதனால் அவரை விடுதலை செய்து இதே பள்ளியில் மீண்டும் ஆசிரியராக பணியாற்ற சொல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மாணவிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மதுக்கூர்- மன்னார்குடி சாலையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வரலாற்று ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் ராஜ்குமார். இவர் மதுக்கூர் தாலூகா நெம்மேலி கிராமத்தைச் சேர்ந்தவர். 52 வயதான ராஜ்குமார் இந்த பள்ளியில் வரலாற்று ஆசிரியராக பணிபுரிந்து வந்த நிலையில், இப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் 17 வயது மாணவி ஒருவர் கடந்த 17 ஆம் தேதியன்று தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது கால் சூப்பர்வைசராக ராஜ்குமார் இருந்திருக்கிறார் . அப்போது மாணவியின் மேஜை அருகே நாற்காலியைப் போட்டுக் கொண்டு அவரது காலை சீண்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மாணவி பெற்றோரிடம் சொல்ல, பெற்றோர் மதுக்கூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அந்தப் புகார் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது. மாணவியின் புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தஞ்சாவூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ராஜ்குமார் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ராஜ்குமார் சார் நல்லவர் அவர் மீது வேண்டுமென்றே பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டு இருக்கிறது. அவரை உடனே விடுதலை செய்து இதே பள்ளியில் ஆசிரியராக பணியமர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மாணவிகள் பள்ளிக்கு செல்லும் பாதையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவிகளில் இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் மதுக்கூர்- மன்னார்குடி இடையே போக்குவரத்து 4 மணி நேரம் பாதிக்கப்பட்டிருக்கிறது.
தகவல் அறிந்ததும் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் கணேஷ் , போலீஸ் டிஎஸ்பி செங்கமலக் கண்ணன் மற்றும் தலைமையாசிரியர் , பள்ளிகல்வித்துறை ஆசிரியர்கள் சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மாணவிகளின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் சொல்ல அதன்பின்னரே சமாதானம் அடைந்து மாணவிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.
+ There are no comments
Add yours