டெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அனைத்து வகையிலும் தோற்று விட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் கடுமையாக சாடியுள்ளார். விவசாயிகள் பிரச்சினை, வெளியுறவுகொள்கை என எல்லா முனைகளிலும் ஒன்றிய பாஜக அரசு தோற்றுப் போய் விட்டதாக மன்மோகன் சிங் கூறியுள்ளார். இந்தியாவில் பஞ்சாப்பில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி உள்ளது. இதனால் மீண்டும் பஞ்சாப்பில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது. இதனால் காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர். பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர் ஜேபிநட்டா, ஒன்றிய அமைச்சர்கள் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பஞ்சாப் தேர்தலையொட்டி அம்மாநில மக்களிடம் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வீடியோவில் பேசியுள்ளார். இதை காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், காங்கிரஸ் செய்த நல்ல பணிகளை மக்கள் இன்று நினைவு கூறுகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் சிறந்த செயல்பாடுகளை மக்கள் நினைவில் வைத்துள்ளனர். பிரதமர் மோடி பாதுகாப்பு விவகாரத்தில், பஞ்சாப் முதல்வரையும், மக்களையும் இழிவுபடுத்த, அவமரியாதை செய்ய அவர்கள் முயன்றனர். ஆனால் அது நடக்கவில்லை. இந்த அரசில், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகிறார்கள். ஏழைகள் பரம ஏழைகளாகிறார்கள்.
பொருளாதாரக் கொள்கை குறித்த சரியான புரிந்துணர்வு இந்த அரசிடம் இல்லை. இவர்களால் ஏற்படும் பாதிப்பு இந்த நாட்டுடன் மட்டும் நிற்கவில்லை. வெளியுறவுக் கொள்கையிலும் பாஜக அரசு தோற்றுப் போய் விட்டது. சீனா நமது எல்லைக்குள் வந்து அமர்ந்திருக்கிறது. அதை தட்டிக் கேட்காமல், மக்களிடமிருந்து மறைக்கவே இந்த அரசு முயற்சித்து வருகிறது. அரசியல்வாதிகளை கட்டி அணைப்பதால் மட்டும் உறவுகள் மேம்படாது அல்லது அழைப்பே இல்லாமல் போய் பிரியாணி சாப்பிடுவதால் உறவுகள் மேம்படாது. பாஜகவின் தேசியவாதம், பிரிட்டிஷ்காரர்கள் பயன்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சியை அடிப்படையாக கொண்டது.
அரசியலமைப்புச் சட்டத்தால் பாதுகாக்கப்பட்ட அனைத்து அமைப்புகளையும் இவர்கள் பலவீனமாக்கி விட்டார்கள் என்று கடுமையாக சாடியிருக்கிறார். இந்தியாவில் புதிய மறுமலர்ச்சியை கொண்டு வந்த முக்கியமான வெகு சில பிரதமர்களில் மன்மோகன் சிங்கும் ஒருவர். இவரது காலத்தில் தான் இந்தியாவில் தொழில் வளர்ச்சி அதிகரித்தது, பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் வேகம் பெற்றன. இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்து மன்மோகன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours