பரிசோதனையிலும் சிக்காத புதிய BA.2 ஓமிக்ரான் கொரோனா.. தடுப்பூசி வேலைசெய்யுமா? சவுமியா சாமிநாதன் பதில்..!

Estimated read time 1 min read

சென்னை:

பிஏ.2 ஒமிக்ரான் வேரியண்ட்டுக்கு எதிராக கொரோனா தடுப்பூசி வேலை செய்யுமா என்பது பற்றி உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் பேட்டியொன்றில் தெளிவுபடுத்தியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உலக அளவில் வேகமாகப் பரவி வருகிறது. டெல்டா வைரசை விட இந்த வைரஸ் வேகமாக பரவுவதால், நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன.

இந்நிலையில், தற்போது ஒமிக்ரான் வைரஸின் மாறுபாடு உலகெங்கும் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே ஒமிக்ரான் பிஏ 1 வேரியண்ட் வைரஸ் பரவி வந்த நிலையில், தற்போது பிஏ2 வேரியண்ட் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. பிஏ3 வேரியண்ட்டும் இதில் வெளிவந்திருக்கிறது.

ஒமிக்ரான் வேரியண்ட்

ஒமிக்ரான் வைரசின் ‘பிஏ.2’ வேரியண்ட் இந்தியா, பிரிட்டன், டென்மார்க் உள்ளிட்ட 40 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வேரியண்ட், ஏற்கனவே உள்ள ஒமிக்ரான் வைரஸை விட அதிவேகமாக பரவக்கூடியது. அதேபோல எதிர்காலத்தில் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என கூறப்படுகிறது. பிஏ2. ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோர் 39 சதவீதம் அதிகம் நோய் பரப்பும் தன்மையை கொண்டிருப்பர்.

சவுமியா சாமிநாதன்

உலக சுகாதார நிறுவனத்தின் விஞ்ஞானி சவுமியா சாமிநாதன் ஒமிக்ரான் வேரியண்ட் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில், ”பிஏ2 வைரஸ் பிஏ1 வைரஸை மாற்றி அமைக்கும். பிஏ2 வெகு சீக்கிரமாக பரவும் தன்மையைக் கொண்டது. அதே சமயம் பாதிப்புகளையும் ஏற்படுத்தும். ஆனால் ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவினாலும், அதனால் ஏற்பட்ட பாதிப்பு குறைந்த அளவுதான் இருந்தது.

வேரியண்ட்

2019ல் தென்பட்ட கொரோனா வைரஸ் ஒவ்வொரு முறையும் உருமாறிக் கொண்டே இருக்கிறது. கொரோனா வைரஸில் இருந்து உருமாறிய டெல்டா வைரஸ் வந்தது, அதற்கடுத்து ஒமிக்ரான் வந்தது. தற்போது ஒமிக்ரானின் வேரியண்ட்கள் வந்திருக்கின்றன. பிஏ1,2,3 என மூன்று வேரியண்ட்கள் வந்திருக்கின்றன. ஆனால் இந்த மூன்றில் பிஏ2 மற்ற இரண்டை விடவும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். அதேசமயம் அதிக நாடுகளில் பரவி வருகிறது.

டெல்டா

டெல்டா வைரஸை விட குறைந்த பாதிப்புகளை ஏற்படுத்து. ஆனாலும் பாதிப்புகள் இருக்கவே செய்யும். ஒமிக்ரான் வேரியண்ட்டால் பாதிக்கப்பட்டவர்களை ஆராய்ந்ததில், தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு இதன் பாதிப்புகள் குறைவாகவே இருந்திருக்கிறது. தடுப்பூசி நிறைய பேரின் உயிரைக் காப்பாற்றியுள்ளது.

பிஏ2

ஒவ்வொரு முறை கொரோனா வைரஸ் உருமாறும் போதும், அதன் தன்மைகளும் மாறிக்கொண்டிருக்கும். ஒமிக்ரான் வேரியண்ட்களில் இந்த பிஏ.2 மட்டும் பரிசோதனைகளில் இருந்து தப்பிக்கக்கூடிய திறனைப் பெற்றிருக்கிறது. இதனால் கண்டறிவதில் சிரமம் இருக்கிறது. ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள்,ஒமிக்ரானின் புது, வேரியண்ட்டால் பாதிக்கப்படுவார்களா என்பது குறித்த ஆராய்ச்சி இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

தடுப்பூசி

ஒமிக்ரான் வேரியண்ட்டால் பாதிக்கப்பட்டவர்களை ஆராய்ந்ததில், அவர்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது. எப்படி டெல்டா வைரஸ்களுக்கு எதிராக தடுப்பூசிகள் வேலை செய்ததோ, அதேபோல் இப்போதும் ஒமிக்ரானுக்கு எதிராகவும் ஒமிக்ரான் வேரியண்ட்களுக்கு எதிராகவும் தடுப்பூசிகள் கண்டிப்பாக வேலை செய்கின்றன” என விஞ்ஞானி சவுமியா தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours