`சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா?’ – பினராயி விஜயனுக்கு ஸ்டாலின் கடிதம்!
கேரளாவின் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகாவில் பெருகுடா என்ற இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு தடுப்பணை கட்டி வருவதாகச் செய்திகள் வெளியானதையடுத்து தமிழ்நாட்டிலிருந்து இதற்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இந்த விவகாரம் தொடர்பாகக் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
அதில், `சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக ஊடகங்களில் வந்த செய்திகளின் காரணமாக, அமராவதி ஆற்றில் நீர்வரத்து வெகுவாகக் குறையும் என்று தமிழ்நாட்டு விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இந்த தடுப்பணை தொடர்பான திட்ட விவரங்கள் ஏதும் தமிழ்நாடு அரசிடமோ அல்லது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடமோ வழங்கப்படவில்லை. இத்திட்டம் குறித்த தற்போதைய நிலவரம் மற்றும் கேரளாவின் பவானி மற்றும் அமராவதி(பம்பார்) துணைப் படுகைகளுக்கான பெருந்திட்டம் (Master Plan) ஆகிய முழு விவரங்களை அளிக்க வேண்டும். இந்தப் பிரச்னை குறித்து சட்டப்படி ஆய்வு செய்வதற்கு இவ்விவரங்கள் மிகவும் தேவை என்பதால், இந்த விவரங்களைத் தமிழ்நாட்டுக்கு உடனடியாக அளிக்கவும், தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கிடையேயான உண்மையான தோழமை உணர்வை நிலைநிறுத்தவும், இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வரை இந்தப் பணியைத் நிறுத்தி வைக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி!
நெல்லை கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த கே.பி.கே.ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட நிலையில் உடனடியாக விசாரணையைத் தொடங்கியது, சிபிசிஐடி. முதல்கட்டமாக ஜெயக்குமார் உடல் கிடந்த தோட்டத்தில் ஆய்வு செய்த இன்ஸ்பெக்டர் உலகராணி தலைமையிலான போலீஸார், ஜெயக்குமார் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மலை ரயில் சேவை மீண்டும் ரத்து!
கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே மலை ரயில் பாதையில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக நீலகிரி மலை ரயில் சேவை மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜெயக்குமார் கொலை வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றம்!
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமாரின் உடல், கருகிய நிலையில் அவரது தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டு வாரங்கள் கடந்து விட்ட போதும், இன்னும் அந்த வழக்கில் முன்னேற்றம் காணப்படவில்லை. தனிப்படைகள் அமைத்தும் வழக்கில் எந்த தகவலும் கிடைக்கபடவில்லை. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளர்.