அதுமட்டுமல்லாமல், இந்த மக்களவைத் தேர்தலில் அதிகரித்திருக்கும் வாக்களர்களில் பெண் வாக்களர்களின் எண்ணிக்கை அதிகம் என்று எஸ்பிஐ ரிசர்ச் கூறுகிறது. குறிப்பாக, இந்தத் தேர்தலில் பெண் வாக்காளர்கள் 93.6 லட்சம் உயர்ந்துள்ளனர். அதே நேரத்தில் ஆண் வாக்காளர்கள் 84.7 லட்சம் அதிகரித்துள்ளனர். இது, இந்திய அரசியலில் பெண்களின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்திருப்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, ஒவ்வொரு 100 ஆண் வாக்காளர்களுக்கும் தோராயமாக 110 பெண் வாக்காளர்கள் என்ற அளவில் பெண்கள் உள்ளனர்.
2014-ம் ஆண்டுக்கு முன் நடத்தப்பட்ட 15 தேர்தல்களில் சராசரியாக அதிகரித்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியாக இருந்திருக்கிறது.
ஆனால் கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தொடங்கி, 2019-ம் ஆண்டு, மற்றும் தற்போதைய 2024-ம் ஆண்டுவரையிலான மூன்று தொடர்ச்சியான தேர்தல்களின் போதும், சராசரியாக அதிகரித்திருக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை 8 கோடியாக இருப்பதாக இந்தத் தரவு சுட்டிக்காட்டியிருக்கிறது.
தற்போது நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் கர்நாடக மாநிலத்தில்தான் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது. குறிப்பாக, அந்த மாநிலத்தில் மட்டும் 35.5 லட்சம் புதிய வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களித்துள்ளனர். இதில், 20.6 லட்சம் பேர் பெண் வாக்காளர்களாக உள்ளனர். இது வாக்காளர்களின் மொத்த அதிகரிப்பில் 58%.
இதேபோல், தெலங்கானாவிலும் வாக்காளர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. 2019-ம் ஆண்டின் மக்களவைத் தேர்தல் புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது அங்கே வாக்காளர்களின் எண்ணிக்கை 31.9 லட்சம் அதிகரித்துள்ளது.
ஆனால், கடவுளின் தேசமான கேரளாவில் தற்போது நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் அதிக அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த காலத்தோடு ஒப்பிடுகையில் தற்போதைய தேர்தலில் 5.3 லட்சம் தனிநபர்கள் வாக்களிக்காமல் இருந்துள்ளனர். அதேபோல, மணிப்பூரில் 3.4 லட்சம் வாக்காளர்கள் தங்களின் வாக்கை செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.