மத்தியப் பிரதேசத்தின் மாவட்ட அரசு மருத்துவமனையில் மயக்க மருந்து நிபுணர் இல்லாததால், அனுமதி மறுக்கப்பட்ட கர்ப்பிணி ஆட்டோவிலேயே குழந்தை பெற்றெடுத்த சம்பவம், தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
இந்த குறித்து வெளியான தகவலின்படி, கர்ப்பிணியின் கணவர் ராஜஸ்தானின் கங்ரார் பகுதியைச் சேர்ந்த தினேஷ் சிலாவத். போர்வைகள் விற்று குடும்பம் நடத்திவரும் இவர், கடந்த சில நாள்களாக மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்திலுள்ள மல்கேடா கிராமத்தில் குடும்பத்தோடு வசித்து போர்வைகளை விற்றுவந்தார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2019-05/4c912df4-de00-439a-9ce4-570911c94dc2/139077_thumb.jpg)
இந்த நிலையில், அவரின் கர்ப்பிணி மனைவி ரஜினிக்கு (30) புதன்கிழமை மதியம் 2:30 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, அவரை ஆட்டோவில் நீமுச் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு தினேஷ் சிலாவத் கொண்டுசென்றார். ஆனால், மருத்துவமனை ஊழியர்கள் கர்ப்பிணியை சேர்க்க மறுத்ததால், ஆட்டோவிலேயே குழந்தை பிறந்தது.
இது குறித்து ஊடகத்திடம் பேசிய கணவர் தினேஷ் சிலாவத், “மருத்துவமனை ஊழியர்கள் என் மனைவியை ராஜஸ்தானின் உதய்பூருக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினர். நாங்கள் எவ்வளவோ கோரிக்கை விடுத்தும், அவர்கள் அசையவே இல்லை. மேலும், பெண் ஊழியர்கள் எங்களை மருத்துவமனையை விட்டு வெளியேறச் சொன்னார்கள்.
பின்னர், மாலை 4 மணியளவில் மருத்துவமனையிலிருந்து நாங்கள் வெளியே வந்தபோது, என் மனைவி ஆட்டோவிலேயே குழந்தை பெற்றெடுத்தார். அதையடுத்து, குழந்தை பிறந்த செய்தியறிந்த மருத்துவமனை ஊழியர்கள், தாய் சேய் இரண்டு பேரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர்” என்று கூறினார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2019-09/6e257614-ddd1-4c47-91a0-d35b9b61de8b/hospital_ward_1338585_640.jpg)
இதுபற்றி பேசிய மருத்துவமனையின் மகப்பேறு துறை தலைவர் டாக்டர் லாட் தாகாட், “என்னுடைய வேலைநேரம் மதியம் 2 மணி வரைதான். 2 மணிக்கு மேல்தான் கர்ப்பிணி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். ஊழியர்கள் இதுபற்றி கூறியதும் நான் சென்றுபார்த்தேன். அப்போது கர்ப்பிணிக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தது. மேலும், மயக்க மருந்து நிபுணர் விடுமுறையில் இருந்ததால் சிசேரியன் செய்ய முடியவில்லை. அதனால், கர்ப்பிணியை வேறு ஒரு பெரிய மருத்துவமனைக்கு கொண்டுசெல்லுமாறு குடும்ப உறுப்பினர்களிடம் கூறப்பட்டது. ஆபத்தைத் தவிர்ப்பதற்காக நாங்கள் அவரை அனுமதிக்கவில்லை” என்று தெரிவித்தார்.
இருப்பினும், இந்தச் சம்பவத்தை அறிந்த நீமுச் மாவட்ட ஆட்சியர் தினேஷ் ஜெயின் இதில் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb