இருந்த போதிலும் அரஸ் நதியில் கட்டப்படும் இந்த மூன்றாவது அணையின் திறப்பு நிகழ்விற்காக இரான் அதிபர் சென்றார். இந்த அணை இரண்டு நாடுகளும் சேர்ந்து திட்டமிட்டு கட்டிய அணையாகும்.
இரண்டு நாடுகளுக்கும் சில கருத்து வேற்றுமைகள் நிலவினாலும், இந்த அணை திட்டமானது “நட்பின் சின்னம்’ என்று இரான் அரசு ஊடகம் குறிப்பிடுகிறது.
இந்த அணை ஞாயிற்றுக்கிழமை விபத்து நடப்பதற்கு ஒரு சில மணி நேரங்கள் முன்பு திறக்கப்பட்டது.
என்ன நடந்தது?
அணை திறப்பு நிகழ்வு முடிந்து இரான் திரும்பும் வழியில் தான் இந்த விபத்து நடந்துள்ளது. அஜர்பைஜான், இரான் எல்லை பகுதியானது காடுகளும், மலைகளும் நிரம்பிய பகுதி. அந்தப் பகுதியில் பயங்கர பனிமூட்டம் நிலவியதாக கூறப்படுகிறது. இப்படியான சூழலில், இரானின் தப்ரிஸுக்குச் சென்று கொண்டிருந்த போது 50 கி.மீ. முன்னதாக வர்செகான் நகருக்கு அருகே அவர் பயணித்த ஹெலிகாப்டர் தரையில் மோதியுள்ளது.
உடனடியாக அந்தப் பகுதிக்கு மீட்புக் குழு ஒன்று அனுப்பப்பட்டது. துருக்கியும் ஆள் இல்லா விமானத்தை தேடுதல் பணிக்காக அனுப்பியது. ரஷ்யாவும் ஒரு மீட்புக் குழுவை அனுப்பியது.
நீண்ட தேடுதல் முயற்சிக்கு பின்பு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி விழுந்த இடத்தை தேடுதல் குழுக்கள் கண்டுபிடித்தன. ‘அவர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை,’ என முதலில் இரான் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டது. பின்னர் இரான் அரசு அதிகாரபூர்வமாக அதிபர் இப்ராஹிம் ரைசி இறந்ததை உறுதி செய்தது. இரான் மீதான பல்வேறு நாடுகளின் பொருளாதார தடை காரணமாக, அந்நாட்டில் விமான போக்குவரத்து பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.