அஸ்ஸாமில் உள்ள சோனிட்பூர் மாவட்டத்தில் புலாகுரி நேபாளி பாம் பகுதியில் உள்ள ஒரு குடும்பத்தில் மட்டும், சுமார் 350 வாக்காளர்கள் இருப்பது, அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
சோனிட்பூர் மாவட்டத்தில் ரங்கபாரா சட்டமன்றத் தொகுதி மற்றும் சோனிட்பூர் நாடாளுமன்றத் தொகுதி அமைந்துள்ளது. இந்த தொகுதியில் வசித்துவரும் நாட்டின் மிகப்பெரிய குடும்பம்தான் ஏப். 19-ம் தேதி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தங்களது வாக்குகளைச் செலுத்த உள்ளனர்.
புலாகுரி நேபாளி பாம் பகுதியில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சுமார் 1,200 குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட இக்குடும்பங்கள் அனைத்தும் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
இங்கு சுமார் 54 ஆண்டுகளுக்கு மேல் கிராமத் தலைவராக இருந்த ரான் பகதூர் தாபாவுக்கு 5 மனைவிகள், 12 மகன்கள் மற்றும் 9 மகள்கள் உள்ளனர். இவருக்கு 56 பேரக்குழந்தைகள் உள்ளனர். 1997-ம் ஆண்டு ரான் பகதூர் காலமான நிலையில், தற்போது அவரது மகனான டில் பகதூர் தாபா கிராமத் தலைவராக இருந்து வருகிறார். இவர்களது குடும்பம்தான் அந்த கிராமத்திலேயே மிகப்பெரிய குடும்பமாம்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எனது தந்தை 1906-ம் ஆண்டு, அவரது 19-வது வயதில் நேபாளத்திலிருந்து அஸ்ஸாமுக்கு வந்து குடியேறினார். இந்த கிராமத்தில் குடியேறிய எனது தந்தை 5 பேரை மணந்தார். இதன்மூலம், எனது தந்தைகுக்கு 12 மகன்கள், 9 மகள்கள் மற்றும் 56 பேரக் குழந்தைகள் உள்ளனர்.
எங்களது குடும்பத்தில், என்னைத் தவிர இன்னும் உயிருடன் இருக்கும் 7 பேரும் சேர்ந்து, வாக்களிக்கச் செல்லும்முன் குடும்பக் கூட்டத்தைக் கூட்டுவோம். இதில், வாக்களிக்கத் தகுதியற்றவர்களை நீக்கி, எஞ்சிய வாக்களிக்கத் தகுதி உள்ளவர்களுடன் ஆலோசனை மேற்கொள்வோம். இதுவே எப்போதும் எங்கள் குடும்பத்தில் உள்ள நடைமுறையாகும்.
ஆனால், தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டளிக்கும் வேட்பாளர் தேர்வு தொடர்பாக குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. இது குறித்து நாங்கள் ஆலோசித்து அளிக்கும் முடிவுகளை குடும்பத்தில் உள்ள இளைய வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள்” என்றார்.