“வாஷிங் மெஷின்… வாஷிங் மெஷின்” என்று கிண்டல் செய்து, பா.ஜ.க-வை விமர்சிக்கிறார்கள், எதிர்க்கட்சியினர். ‘ஊழல் வழக்கு, முறைகேடு வழக்கு, மோசடி வழக்கு, திருட்டு வழக்கு என எந்த வழக்குகள் இருந்தாலும், பா.ஜ.க-வில் சேர்ந்துவிட்டால், நீங்கள் புனிதராகிவிடலாம். இதுதான் பா.ஜ.க வாஷிங் மெஷினின் மகிமை’ என்று எதிர்க்கட்சியினர் கிண்டல் செய்கிறார்கள்.

மோடி

சமீபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, மேடையிலேயே வாஷிங் மெஷின் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதில், ‘பா.ஜ.க வாஷிங் மெஷின்’ என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.

அமலாக்கத்துறை விசாரணை, வருமான வரிப் பிரச்னைகள் உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்கொண்டுவரும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பா.ஜ.க-வில் இணைந்த பிறகு, அவர்கள் மீது விசாரணை முடிவுக்கு வருவதும், வழக்குகள் கைவிடப்படுவதும் சகஜமாகிவிட்டது. இந்த விவகாரத்தைத்தான், பா.ஜ.க-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தீவிரமாக பிரசாரம் செய்துவருகின்றன.

பா.ஜ.க வாஷிங் மெஷினுடன் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரான பவன் கேரா, ‘பா.ஜ.க வாஷிங் மெஷினின் விலை ரூ.8,500 கோடி (தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க-வுக்கு நன்கொடையாக வந்த நிதி). ஆளும் பா.ஜ.க-வின் முழுமையான தானியங்கி சலவை எந்திரம், பா.ஜ.க-வில் சேருங்கள்… வழக்குகள் முடிக்கப்படும் என்ற கொள்கையைக் கொண்டது’ என்றார்.

ஊழல் வழக்குகளை எதிர்கொண்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் மீதான வழக்குகள், பா.ஜ.க-வில் அவர்கள் சேர்ந்த பிறகு கைவிடப்பட்டிருக்கின்றன. இதற்கு சமீபத்திய உதாரணம், முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் படேல். சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சரவையில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர்.

2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு எதிராக பா.ஜ.க குற்றப்பத்திரிகை ஒன்றை வெளியிட்டது. அதில், ஏர் இந்தியா ஊழல் மூலமாக ரூ.30,000 கோடி வரை முறைகேடு செய்யப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. அந்த ஊழல் குற்றச்சாட்டு ஆளானவர்தான் பிரபுல் படேல். அவர் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, தனியார் விமான நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டார் என்று 2017-ம் ஆண்டு இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுபட்ட பிறகு, பிரபுல் படேல் பா.ஜ.க கூட்டணியில் சேர்ந்தார். அதன் பிறகு, பிரபுல் படேலுக்கு எதிரான வழக்குகளில் ஆதாரம் இல்லை என்று சொல்லி வழக்கை முடித்துவைக்கும் அறிக்கையை நீதிமன்றத்தில் சி.பி.ஐ தாக்கல் செய்தது.

பிரபுல் படேல், அஜித் பவார்

பிரபுல் படேல் மட்டுமல்ல, பா.ஜ.க-விலும், பா.ஜ.க கூட்டணியிலும் சேர்ந்த பிறகு ‘புனிதர்’களாக மாறியவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. ஊழல்வாதிகளை ‘தூய்மை’ப்படுத்தும் வேலையை பா.ஜ.க பகிரங்கமாக செய்துவருகிறது, மக்களுக்கும் இதை நேரடியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சி ஆட்சியதிகாரத்தில் இருந்தபோது, அதற்கு எதிராக ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. நிலக்கரி ஊழல், 2 ஜி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல் என்று பல வழக்குகள் பூதாகரமாகக் கிளம்பி, 2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு முக்கியக் காரணமாக இருந்தது. அப்போது ‘நாங்கள் நேர்மையானவார்கள். இது ஒரு வித்தியாசமான கட்சி’ என்றெல்லாம் சொல்லிக்கொண்டவர்கள்தான் பா.ஜ.க-வினர்.

அமித் ஷா – மோடி

ஆனால், இன்றைக்கு காங்கிரஸையே பா.ஜ.க மிஞ்சிவிட்டது. ‘உலக மகா ஊழல்’ என்ற தகுதிக்குரிய பல ஊழல்கள் பா.ஜ.க ஆட்சியில் நடைபெற்றிருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. அதைவிட, ஊழல்களில் ஊறித்திளைத்தவர்களைப் புனிதர்களாக்கும் ‘வாஷிங் மெஷின்’ வேலையை பா.ஜ.க செய்துவருவது இன்னும் கொடுமையானது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். இதை மிகப்பெரிய பிரசாரமாக பா.ஜ.க-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மேற்கொள்கின்றன. ஆனால், எந்தளவுக்கு இது வாக்களர்களைச் சென்றடையப்போகிறது, இந்த விவகாரத்தை வாக்காளர்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பது தேர்தலுக்குப் பிறகுதான் தெரியவரும். ஆனால் ஒன்று… ’தூய்மையான கட்சி, நேர்மையான கட்சி’ என்ற பா.ஜ.க-வின் பிம்பம் தகர்ந்துவிட்டது என்பது மட்டும் நிச்சயம் என்கிறார்கள் மக்கள்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *