கேரள மாநிலம், வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் முதன் முதலாக நேற்று வயநாட்டுக்கு வந்த ராகுல் காந்தி, கல்பேட்டாவிலிருந்து வயநாடு கலெக்டர் அலுவலகம் வரை ரோடுஷோ நடத்தினார். இதில் பிரியங்கா காந்தியும் கலந்துகொண்டார். அந்த பேரணியின்போது காங்கிரஸ் கொடிகளோ, கூட்டணி கட்சியான முஸ்லிம் லீக் கட்சியின் கொடிகளோ பயன்படுத்தப்படவில்லை. பேரணியில் கலந்துகொண்டவர்கள் ராகுல் காந்தியின் படங்களை எடுத்துவந்தனர். ராகுல் காந்தியின் ரோடு ஷோ நிகழ்ச்சியில் காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் கட்சிகளின் கொடிகள் பயன்படுத்தப்படாமல் இருந்ததும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், “முஸ்லீம் லீக்கின் ஓட்டு வேண்டும். அவர்களின் கொடி தேவையில்லை என்ற நிலைப்பாட்டை காங்கிரஸ் எதற்காக எடுத்துள்ளது. சொந்த கட்சி கொடியைக்கூட வெளியில் காட்டமுடியாத மோசமான நிலை காங்கிரசுக்கு ஏற்பட்ட காரணம் என்?” என கிண்டலடித்தார்.