நீலகிரி நாடாளுமன்ற தனி தொகுதியில் தி.மு.க சார்பில் தொடர்ந்து நான்காவது முறையாக போட்டியிடுகிறார் ஆ.ராசா. பா.ஜ.க-விற்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டு தனக்கான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். கிராம மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிக்கும் விதமாக, நீலகிரியில் உள்ள பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் பரப்புரை பயணம் மேற்கொண்டு வருகிறார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-04/cff96169-e8a8-434a-946f-c8a212f3feec/IMG_20240402_WA0013.jpg)
குன்னூர் அருகில் உள்ள அருவங்காடு பகுதியில் பிரசாரம் செய்த ஆ.ராசா, “நாடாளுமன்ற தேர்தலில் தற்போது நான் 8-வது முறையாக போட்டியிடுகிறேன். எந்த தேர்தலிலும் இப்படி ஒரு அச்சுறுத்தல் இந்த தேசத்திற்கு ஏற்படவில்லை. மதத்தின் பெயரால் பிரதமர் மோடியின் கீழ் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பா.ஜ.க ஆட்சியில், தேசத்தின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது.
வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு கலாசாரங்களில் வாழும் மக்களைக் கொண்ட இந்திய துணைக் கண்டத்தை ஒரே பாரதம் என்ற பெயரில் சிதைக்கப் பார்க்கிறார்கள். நாட்டு நலனில் அக்கறை இருப்பதைப்போல காட்டிக்கொள்ளும் இவர்களுக்கு, உண்மையில் நாட்டுப்பற்று கிடையாது. முப்படைகளின் தலைமைத் தளபதியாக இருந்த பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகள், இங்கே ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தனர். நாட்டையே உலுக்கிய அந்த துக்க சம்பவத்தின்போது நீலகிரி மாவட்டத்திற்கு பிரதமர் மோடியோ மத்திய அமைச்சர்களோ வரவில்லை.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-04/4a9294b9-dc1b-490a-ba3a-14a6b54d6afd/IMG_20240402_WA0009.jpg)
முதல்வர் ஸ்டாலின்தான் நேரில் வந்து, இறந்தவர்களின் உடல்களுக்கு வீரவணக்கம் செலுத்தினார். உடல்களை நல்லமுறையில் அனுப்பி வைத்தார். ஆனால், இன்றைக்கு ஓட்டு கேட்பதற்காக நீலகிரி மாவட்டத்திற்கு வருகைத் தர இருக்கிறார் பிரதமர் மோடி. இது ராசாவுக்கான தேர்தலோ தமிழகத்திற்கான தேர்தலோ அல்ல. மதவாத சக்திகளிடமிருந்து தேசத்தையும் இறையாண்மையையும் பாதுகாக்க வேண்டிய தேர்தல் இது. அனைவரும் இதை உணர்ந்து வாக்களியுங்கள்” என்றார்.