பேரறிஞர் அண்ணா, முரசொலி மாறன், டி.ஆர்.பாலு என தி.மு.க-வின் முன்னோடிகள் வென்ற தொகுதி தென்சென்னை. விருகம்பாக்கம், சைதாபேட்டை, தி.நகர், மைலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் என சென்னையின் இதயத்துடிப்பு சட்டமன்றத் தொகுதிகளை, தன்னகத்தே உள்ளடக்கியது இந்த நாடாளுமன்றத் தொகுதி. இதில் 2019-ல் வென்ற தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும் போட்டியிடுகிறார். அ.தி.மு.க சார்பில் முன்னாள் எம்.பி ஜெயவர்தனும், பா.ஜ.க சார்பில் முன்னாள் ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜனும் போட்டியிடுகின்றனர்.
அதன்படி, பா.ஜ.க வேட்பாளர் தமிழிசையை ஆதரித்து, பிரதமர் மோடி அடுத்த வாரம் பிரசாரம் செய்ய உள்ளார். மறுபக்கம் தமிழச்சி தங்கபாண்டினுக்கு ஆதரவாக ம.தி.மு.க தலைவர் வைகோ, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் உள்ளிட்ட பலரும் பிரசாரம் செய்து வருகின்றனர். முன்னதாக, அமைச்சர் உதயநிதி பிரசாரம் செய்திருந்தார்.
இதையடுத்து, முதல்வர் ஸ்டாலினும், தி.மு.க துணை பொதுச்செயலாளர் கனிமொழியும் பிரசாரம் செய்யவுள்ளனர்.
அதேபோல, ஜெயவர்தனை ஆதரித்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தும் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளனர். தலைவர்கள் வட்டமிடுவதால் தென் சென்னை ஸ்டார் தொகுதியாக கருதப்படுகிறது. மேலும், மும்முனை போட்டி நிலவுவதாக கருதப்படுகிறது.