ஈரோடு அருகே சித்தோட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின் த.மா.கா சார்பில் போட்டியிடும் விஜயகுமாரை ஆதரித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, பிரசாரம் மேற்கொண்டார். அவர் பேசுகையில், “தமிழகத்தில் மாற்று அரசியலுக்காக ஆரம்பிக்கப்பட்ட த.மா.கா இன்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது.
நாட்டின் வளர்ச்சிக்கு யார் பிரதமராக வர வேண்டும் என்பதை வாக்காளர்கள் தெரிந்து வாக்களிக்க வேண்டும். ஈரோட்டில் அண்மையில் நடைபெற்ற தி.மு.க பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் என்ன பேசுவதென்றே தெரியாமல் பொய்யை மட்டும் பேசிவிட்டுச் சென்றிருக்கிறார். எழுதிக் கொடுத்ததை படிப்பது மட்டும்தான் அவர் வேலை. தி.மு.க-வினர் வெறும் பணத்தை வைத்து மக்களை விலைக்கு வாங்கி விடலாம் என எண்ணுகின்றனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-04/c7e7f74e-dd6e-4c78-b2a2-96ace102f4e6/WhatsApp_Image_2024_04_04_at_1_39_25_PM.jpeg)
மற்ற கட்சியினர் செய்யும் ஆடம்பரத்தையும், மாயையையும் பா.ஜ.க செய்ய தேவையில்லை. மத்தியில் ஆட்சி செய்த பா.ஜ.க கடந்த பத்து ஆண்டுகளில் மக்களுக்காக மிக கடுமையாக உழைத்திருக்கிறோம். அந்த ஒன்றே நாங்கள் வெற்றி அடைவதற்கு போதுமானது. மத்திய அரசு நிதி வழங்காமல் வஞ்சிக்கிறது என அமைச்சர் உதயநிதி பேசுகிறார்.
அவருக்கு அடிப்படையான அறிவு இருந்தால் கூட்டி பார்த்தாலே தெரிந்துவிடும். இந்தியாவிலேயே எந்த மாநிலத்துக்கும் வழங்காத வகையில் தமிழகத்துக்கு மட்டும் ரூ.11 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. மத்திய அரசு பட்ஜெட்டுக்கு நேரடியாக கொடுத்ததுதான் 29 பைசாதான். ஆனால், விவசாயிகள், மருத்துவக் காப்பீடு, எரிவாயு மானியம், கான்கிரீட் வீடு என மத்திய அரசு நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குக்கு பல கோடிகளைக் கொடுத்துள்ளது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-04/90e15cd8-d656-4a8b-a859-7a3f4549117f/WhatsApp_Image_2024_04_04_at_1_39_27_PM__1_.jpeg)
தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு கஞ்சா விற்பனைதான் வளர்ச்சியடைந்துள்ளது. பெரும் நகரங்களில் இருந்த கஞ்சா விற்பனை தற்போது கிராமங்களிலும் நடைபெறுகிறது. இதுதான் தி.மு.க-வின் சாதனை. கஞ்சா விற்பனை செய்பவருக்கும், உதயநிதி குடும்பத்திற்கும் தொடர்பு என்று சொன்னதால் என்மீது முதல்வர் வழக்கு போட்டுள்ளார்” என்றார்.