புதுச்சேரி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, 108 திவ்ய தேச பெருமாள் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீவாரி திருக்கல்யாண சேவா டிரஸ்ட் தலைவரும், அமைச்சருமான லட்சுமிநாராயணன் நேற்று அளித்த பேட்டி:
ஸ்ரீவாரி திருக்கல்யாண சேவா டிரஸ்ட் சார்பில், புதுச்சேரியில் திருப்பதி பெருமாளுக்கு 5 முறை திருக்கல்யாண உற்சவம் நடத்தப்பட்டுள்ளது. இதில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று தரிசனம் செய்துள்ளனர். தற்போது, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, புதுச்சேரியில் முதல் முறையாக, 108 திவ்ய தேசங்களில் அருள்பாலிக்கும் பெருமாளின் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.
நுாற்று எட்டு திவ்ய தேசங்களில் மூலவர் பெருமாள் எப்படி இருப்பாரோ, அதேமாதிரியான சிலைகள் பொதுமக்களின் தரிசனத்துக்கு வைக்கப்பட உள்ளன.
மேலும், திருமாலின் தசாவதாரத்தை விளக்கும் சிலைகளும் தரிசனத்துக்கு வைக்கப்பட உள்ளன. ஆனந்தா கல்யாண மண்டபத்தில் வரும் 23ம் தேதி (நாளை) துவங்கி, 25ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு திவ்ய தேச பெருமாளை பொதுமக்கள் தரிசனம் செய்யலாம்.
காலை 7:00 மணி முதல், இரவு 9:00 மணி வரை திறந்து இருக்கும். அனைவருக்கும் அனுமதி இலவசம். தரிசனத்துக்கு வருகின்ற அனைவருக்கும் பிரசாதமாக லட்டு வழங்கப்படும்.
நாளை 23ம் தேதியன்று காலை 6:00 மணியில் இருந்து 6:30 மணிக்குள் சொர்க்க வாசல் திறக்கும் வைபவத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சொர்க்கவாசல் திறப்புடன், 108 திவ்ய தேச மூலவர் மற்றும் திருமாலின் தசாவதார தரிசனம் துவங்குகிறது.
பொதுமக்கள் அனைவரும் தரிசனம் செய்து பெருமாளின் அருளை பெறுமாறு அழைக்கிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார். டிரஸ்டின் செயலாளர் பாபுஜி, பொருளாளர் நவீன் பாலாஜி உடனிருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement