வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
விஜயவாடா: திறன் மேம்பாட்டு வாரியம் தொடர்பாக ஒப்பந்தம் வேண்டாம் என அதிகாரிகள் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை எச்சரித்தனர். ஆனால், அவர்களை ஒப்பந்தம் போட அவர் கட்டாயப்படுத்தினார் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கூறினார்.
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போது, திறன் மேம்பாட்டு வாரியத்தில் ரூ.3,350 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் தனியார் நிறுவனங்களை அனுமதிப்பதற்காக 317 கோடி ரூபாய் சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டதாக 2021ல் ஊழல் தடுப்பு வாரியம் சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 9ம் தேதி சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கூறியதாவது: இந்த மோசடியின் பின்னணியில் உள்ள சூத்திரதாரியை புலனாய்வு அமைப்புகள், ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் மூலம் அம்பலப்படுத்திய உடன், மோசடியான இந்த ஒப்பந்தத்தில் சந்திரபாபு நாயுடுவின் ஈடுபாடு வெளிப்படையாக தெரிந்தது. இந்த ஒப்பந்தத்தை தொடர வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்தனர். ஆனால், அவர்களை ஒப்பந்தத்தை செய்யும்படி வலியுறுத்தினார்.
குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் அனைத்து ஆதாரங்களையும் சேகரித்தனர். அதே நேரத்தில் போலி நிறுவனங்களுக்கு திருப்பி விடப்பட்ட நிதியை அமலாக்கத்துறை கண்டறிந்தது. இதன் விளைவாக பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த மோசடியான ஒப்பந்தம் திட்டமிட்டது தொடர்பாக சந்திரபாபு நாயுடுவின் உதவியாளர் அனுப்பிய குறுஞ்செய்திகளையும் வருமான வரித்துறையினர் கண்டறிந்தனர். கைது குறித்த வழக்கு விசாரணையின் போது துவக்கத்தில் கேள்வி எழுப்பிய சந்திரபாபு நாயுடு, பின்னர் அமைதியாகி விட்டார். இவ்வாறு ஜெகன் மோகன் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement