உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:………
அ.குணா, கடலுாரிலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்:
சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை போன்ற விசாரணை அமைப்புகளை, மத்திய அரசு தங்களுக்கு எதிராக பயன்படுத்துவதாகக் கூறியும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியும், ௧௪ எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.
![]() |
இந்த எதிர்க்கட்சிகள் அனைத்தும், தங்களில் யார் பிரதமர் வேட்பாளர் என்பதில், ஒருமித்த கருத்தை எட்ட முடியாதவை. இந்தக் கட்சிகளின் தலைவர்கள் செய்த ஊழல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் போது மட்டும், ஒரே அணியாக கைகோர்த்து நிற்கின்றனர்.
இதில் வேடிக்கை என்னவெனில், 1975ல் நாட்டில் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்து, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் சொல்ல முடியாத துயரங்களை தந்த கட்சி காங்கிரஸ்.
அப்படி, ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கிய காங்., கட்சியும், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த கட்சிகளில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது.
அதேபோல, நெருக்கடி நிலை பிரகடனத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தி.மு.க.,வும், அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அதாவது, முதல்வர் ஸ்டாலினும், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கையெழுத்திட்டுஉள்ளார்.
சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் தன், ௭௦வது பிறந்த நாளை கொண்டாடினார். அதையொட்டி நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், நெருக்கடி நிலை பிரகடனத்தின் போது, சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஸ்டாலினை, சிறைக் காவலர் உதைப்பது போன்ற பொம்மை வைக்கப்பட்டு, அனைவரின் அனுதாபத்தை பெற முயற்சி செய்திருந்ததை பலரும் பார்த்திருப்பர்.
அவசர நிலையை அறிமுகப்படுத்தி, இந்திரா செய்த ஜனநாயக படுகொலையுடன் ஒப்பிடும் போது, ஊழல் அரசியல்வாதிகள் மீது நியாயமான முறையில், மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் தவறானவை அல்ல. நல்ல வேளையாக, ௧௪ கட்சிகள் சேர்ந்து தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
‘ஏதாவது ஒரு அரசியல் தலைவர், மத்திய புலனாய்வு நிறுவனத்தினர் தன்னை குறிவைக்கின்றனர் என்ற விபரங்களுடன் வந்தால், அதை நீதிமன்றம் விசாரணை செய்யும். ‘ஒட்டு மொத்தமாக நாங்கள் குறி வைக்கப்படுகிறோம்’ என்ற, ‘கோரஸ்’ பாடி, விபரங்களை கொடுக்காமல் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க முடியாது’ என்று கூறி விட்டது.
![]() |
மேலும், ‘அரசியல்வாதிகளுக்கு சட்ட விசாரணையிலிருந்து, விசேஷ விதிவிலக்கு எதுவும் கிடையாது; எல்லாரும் சேர்ந்து, ஒரே குரலில், ‘துஷ்பிரயோகம்…’ என்று மனு போடுவதுதான் அரசியலே தவிர, சட்டப்படி அதிகார துஷ்பிரயோகம் இல்லை’ என, எதிர்க்கட்சிகளையும் குட்டியுள்ளதுடன், மூக்கறுத்தும் விட்டது, உச்ச நீதிமன்றம்.
உண்மையில், எதிர்க்கட்சிகள் மீது பொய்யான வழக்குகளை, சி.பி.ஐ., தாக்கல் செய்தாலும், அமலாக்கத் துறை தவறான நடவடிக்கை எடுத்தாலும், அதை அவர்கள் சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும்; அதை தவிர்த்து, குறுக்கு வழிகளில் சட்டத்தை வளைக்க முயற்சிப்பது சரியல்ல. நம் நீதித்துறை இன்றும் உயிர்ப்புடன் இயங்குகிறது என்பதை, எதிர்க்கட்சிகள் மறந்து விடக்கூடாது.