அமைச்சர் மனோதங்கராஜ் பேசுகையில், “தமிழக முதல்வர் எல்லா நிலையிலும், எல்லா மக்களுக்கும் அனைத்து விதமான வாய்ப்புக்களையும் கொடுக்க வேண்டும் என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அதன்படி உலகத்தரம் வாய்ந்த புத்தகங்களைக்கொண்டு சென்னையில் புத்தக திருவிழா நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஐ.டி துறை சார்பில் திருக்குறள் ஓவிய போட்டி, வாசிக்கும் போட்டி, திருக்குறளை நாடகமாக நடித்துக்காட்டும் நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம். தமிழ் இணையத்தில் டிஜிட்டல் திருக்குறளை பதிவேற்றம் செய்துள்ளோம். வாசிப்பு எவ்வளவு முக்கியம் என எல்லோரும் கூறினார்கள். நீங்கள் நிறைய படிக்க வேண்டும். புரிந்துகொண்டு படித்து அந்த அறிவை வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும். சரித்திரம் படைத்த தலைவர்கள் வாசிப்பை நேசித்தவர்களாக இருந்தார்கள். நானும், கலை இலக்கியம், ஆன்மீகம், வரலாற்று புத்தகங்களை படித்து வருகிறேன்.
பயணத்தின்போதும் புத்தகங்களை வைத்திருப்பேன். பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நேரம் கிடைப்பது பெரும் சவால். நேரம் இருப்பவர்கள் புத்தகத்தை வாசித்தால் அது மிக பயனுள்ள நேரமாக அமையும். சிலர் வாழ்க்கையில் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பார்கள். அவர்களுக்கு முன் அனுபவம் இருக்காது. புத்தகம் மூலம் எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடியும், எளிதில் முடிவு எடுக்க முடியும். பண்டைய இலக்கியங்களை படித்தால் மக்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என படிக்க முடியும்.