இந்த அறிக்கை கடந்த ஏப்ரல் 29-ம் தேதி தமிழக வனத்துறையால் இணையத்தில் வெளியிடப்பட்டது. ஆங்கிலத்தில் சுமார் 161 பக்கங்கள் கொண்ட இந்த வரைவு அறிக்கையில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 42 யானை வழித்தடங்கள் புதிதாக கண்டறியப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தருமபுரி, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டம் மசினகுடி, கூடலூர், திண்டுக்கல், விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட வனக் கோட்டங்களில் இந்த யானை வழித்தடங்கள் கண்டறியப்பட்டிருக்கின்றன.
`வனத்துறை அறிக்கையில் தெரிவித்திருக்கும்படி இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதிகள் அனைத்தும் வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும். அதன்பிறகு பல தலைமுறைகளாக அப்பகுதிகளில் வசித்துவரும் மக்கள் தங்களின் குடியிருப்புகளைவிட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்” என சம்மந்தப்பட்ட மக்கள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக, நீலகிரி மாவட்டம் மசினகுடி, கூடலூர் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இத்திட்டத்துக்கு எதிராக தங்கள் கிராமங்களில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
![விநாயகன் யானை](https://gumlet.vikatan.com/vikatan%2F2019-05%2F513063ef-3a88-4f46-9c8f-e157f721354c%2F144916_thumb.jpg?auto=format%2Ccompress)
காரணம், நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதியில் மட்டும் கிட்டத்தட்ட 46 கிராமங்கள் இதனால் பாதிக்கப்படவிருக்கின்றன. குறிப்பாக, நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்தில் தேவர்சோலா- நிலம்பூர், ஓவேலி என இரண்டு யானை வழித்தடங்கள் கண்டறியப் பட்டிருக்கின்றன. இதில், தேவர்சோலா- நிலம்பூர் வழித்தடத்தில் உள்ள 7 கிராமங்களில் சுமார் 34,796 குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஓவேலி வழித்தடத்தில் உள்ள 31 கிராமங்களில் சுமார் 2,547 குடும்பங்கள் வசித்துவருகின்றன. அதேபோல, மசினகுடி வனக்கோட்டத்தில் கண்டறியப்பட்டிருக்கும் சீகூர் யானை வழித்தடத்தில் உள்ள 8 கிராமங்களில் சுமார் 513 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அரசு இந்தப் பகுதிகளை யானை வழித்தடங்களாக அறிவிக்கும் பட்சத்தில் இந்த கிராமங்களில் காலம் காலமாக வசித்து வரும் மக்களின் குடியிருப்புகள், அவர்கள் சார்ந்திருக்கும் விவசாய நிலங்கள், தேயிலைத் தோட்டங்கள் என அனைத்தும் அரசின் வனத்துறை கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும் என்பதால் கிராம மக்கள் மட்டுமல்லாமல் பல்வேறு அரசியல்கட்சித் தலைவர்களும் இந்தத் திட்டத்துக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.
![எடப்பாடி பழனிசாமி](https://gumlet.vikatan.com/vikatan%2F2021-02%2F99a2d126-a6b2-4de5-a651-4483d0912155%2Fc5e15430-75ef-41ae-8c82-026e20db031c.jpg?auto=format%2Ccompress)
குறிப்பாக, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “கடந்த 2000-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், தமிழ் நாட்டில் 25 யானை வழித் தடங்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. 2017-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஆய்வில், தமிழ் நாட்டில் 18 யானை வழித் தடங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 2023-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஆய்வில் 20 யானை வழித் தடங்கள் இருப்பதாகவும், அதில் 15 தமிழகத்திலும், 5 கேரளா மற்றும் கர்நாடகாவில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இறுதியாக, கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, தமிழகத்தில் சுமார் 42 யானை வழித் தடங்கள் இருப்பதாகக் கணக்கிட்டு 29.4.2024 அன்று ஒரு வரைவு அறிக்கையினை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது.