திருப்பூர் மற்றும் ஈரோட்டில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசுகையில், “இந்தத் தேர்தல் ஜனநாயகத்துக்கம், சர்வாதிகாரத்துக்கும் இடையே நடைபெறும் போர். மத்திய அமைப்பான சிபிஐ-யை வைத்து மிரட்டி தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக பல கோடியை பாஜக பெற்றுள்ளது.
ராமர் , இந்து என பேசும் பாஜக இந்து மக்களையும் ஏமாற்றி வருகிறது. மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஊழல்வாதிகளை விட மாட்டோம் என்கிறார். ஆனால், பாஜக-வில் இணைந்தவர்கள் மீது இருந்த குற்ற வழக்குகள் முடித்துவைக்கபட்டுள்ளது. சிபிஐ-யை வைத்து மிரட்டி பாஜக-வுக்கு இழுக்கிறார்கள். தொழில்துறையினரை அமலாக்கத்துறை மூலம் மிரட்டி நன்கொடை வாங்குகிறார்கள்.
![செல்வப்பெருந்தகை](https://gumlet.vikatan.com/vikatan%2F2024-04%2F07a4106c-105a-4c15-9fe2-f427e5a99292%2FWhatsApp_Image_2024_04_03_at_10_11_33_PM.jpeg?auto=format%2Ccompress)
தமிழகத்தில் வாக்கு கேட்கும் மோடி… இதுவரை அவர் தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன என்று பட்டியிலிட முடியுமா? சீனாவின் தூதராக மோடி செயல்படுகிறார் என பாஜக-வின் மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி சொல்கிறார். சுதந்திரப் போராட்டத்திற்கு எதிராக நின்றவர்கள்; 40 ஆண்டுகளாக அவர்கள் கட்சி அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றாமல் இருந்தவர்கள் இன்று இந்தியாவின் ஒருமைப்பாட்டைப் பற்றி பேசுகிறார்கள்.
50 ஆண்டுகளுக்கு முன் நடந்த கச்சத்தீவு விவகாரத்தை பேசும் பிரதமர் மோடி, சமீபத்தில் அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் சீன அரசாங்கம் 30 கிராமங்களுக்கு அவர்கள் பெயர்களை சூட்டி இருப்பதை பற்றி பேசுவாரா… ” என்று கேள்வி எழுப்பினார் செல்வப்பெருந்தகை.