விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் ஸ்டார் வேட்பாளரான ராதிகா சரத்குமாரை ஆதரித்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சிவகாசி காரனேசன் சந்திப்பில் வாகனப் பிரசாரம் செய்தார். அப்போது, டி.டி.வி. தினகரன் பேசுகையில், “விருதுநகர் தொகுதிக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற 3-வது முறையாக மோடி பிரதமராக வரவேண்டும். உலக நாடுகள் வியந்து பாராட்டும் அளவிற்கு இந்தியாவை முன்னேற்றிய பிரதமர் மோடிதான் நமது பிரதமர் வேட்பாளர். தி.மு.க கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என தெரியவில்லை.

பிரசாரம்

இந்தியா கூட்டணி என்பது தலை இல்லாத முண்டம் போல உள்ளது. நமக்கு சிங்கம் போல மோடி உள்ளார். 3 ஆண்டுகளாக, தேர்தல் வாக்குதியை நிறைவேற்ற முடியாத அரசாக தி.மு.க. ஆட்சி உள்ளது. மறுபக்கம் இரட்டை இலையை வைத்துக்கொண்டு எடப்பாடி பழனிசாமி மக்களை ஏமாற்றி வருகிறார். துரோகத்தின் மூலமே அ.தி.மு.க-வை பழனிசாமி கைப்பற்றியுள்ளார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிடம் இருந்தபோது இரட்டை இலை வெற்றி சின்னமாக இருந்தது. தற்போது, எடப்பாடி பழனிசாமி வசம் இருப்பதால் இரட்டை இலை தோல்வி சின்னமாக மாறியிருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க தோல்வி அடைந்துள்ளது. நாம் செய்த தவறு எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியது தான்.

பிரசாரம்

நமது கூட்டணியில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை, முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் முருகன், பொதுச் செயலாளர் ராம சீனிவாசன், ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் சுயேச்சையாகவும், நான் தேனியிலும் போட்டியிடுகிறேன். சேலத்து சிங்கம் எனக்கூறி கொள்பவர்களும், மணிகளும், விழுப்புரத்தில் தள்ளாடுபவரும், கிருஷ்ணகிரியில் திராவிட இயக்கத் தளபதி என்பவரும் ஏன் தேர்தலில் போட்டியிடவில்லை. தி.மு.க., கூட்டணி பணத்தை நம்பி தேர்தலில் நிற்கிறது. இவர்களின் மக்கள் விரோத ஆட்சிக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும். தமிழகத்தில் ஆளும் கட்சித் துணையோடு போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. தேர்தல் முடிந்தவுடன் இவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்படுவார்கள். 10 ஆண்டுகளாக நடந்த சிறந்த ஆட்சியினால் தீவிரவாதிகள் இந்தியா பக்கம் தலை வைத்துக்கூட பார்க்கவில்லை.

அண்டை நாடுகள் இந்தியாவிடம் வாலாட்டுவது கிடையாது கிடையாது. பிரதமர் மோடியால் உலக நாடுகள் இந்தியாவை தலை நிமிர்ந்து பார்க்கின்றன. பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சிக்கு வந்தால், இந்தியா வல்லரசாகும்” என்றார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *