மகாராஷ்டிராவில் ஐந்து கட்டமாக மக்களவைத் தேர்தல் நடப்பதால், அரசியல் கட்சிகளிடையே இன்னும் தொகுதிப் பங்கீடு முடியாமல் இருக்கிறது. எதிர்க்கட்சிகள் அடங்கிய மகாவிகாஷ் அகாடி மற்றும் பா.ஜ.க கூட்டணியில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான தொகுதிகளில் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது. ஆனாலும் சில தொகுதிகளில் யார் போட்டியிடுவது என்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. பா.ஜ.க இத்தேர்தலில் 29 தொகுதிகளில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அமைச்சர் நாராயண் ராணே போட்டியிடுவதற்காக ரத்னகிரி தொகுதியை பா.ஜ.க கேட்டுக்கொண்டிருக்கிறது. இத்தொகுதியில் தற்போது எம்.பி-யாக இருப்பவர் உத்தவ் தாக்கரே அணியில் இருக்கிறார். ஆனாலும் இத்தொகுதி தங்களுக்கு வேண்டும் என்று சிவசேனா (ஷிண்டே) அடம்பிடிக்கிறது.

சகன் புஜ்பால்

அத்தொகுதியில் சிவசேனா அமைச்சர் உதய் சாவந்த் சகோதரர் கிரண் சாவந்த்தை போட்டியிட வைக்க சிவசேனா முயன்று வருகிறது. சிவசேனா ஆதரவு கொடுக்காவிட்டால் தனித்து போட்டியிடுவோம் என்று நாராயண் ரானே கூறிக்கொண்டிருக்கிறார். நாசிக் தொகுதியில் இப்போது சிவசேனாவின் கோட்சே எம்.பி-யாக இருக்கிறார். அவர் மீண்டும் அத்தொகுதியில் போட்டியிட விரும்புகிறார். ஆனால் அத்தொகுதிக்கு தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) உரிமை கோரிக்கொண்டிருக்கிறது. மாநில அமைச்சர் சகன் புஜ்பாலை இங்கு நிறுத்த அஜித் பவார் திட்டமிட்டுள்ளார். பா.ஜ.க-வும் இதற்கு ஆதரவு கொடுத்து இருப்பதாக தெரிகிறது.

இதனால் கோட்சே தனது ஆதரவாளர்களுடன் மும்பை சென்று ஷிண்டேயை சந்தித்து பேசி வருகிறார். `என்னால் முடிந்த அளவு முயற்சி செய்கிறேன்’ என்று ஷிண்டே வாக்குறுதி கொடுத்துக்கொண்டிருக்கிறார். இதே போன்று யவத்மால் தொகுதியில் எம்.பி-யாக இருக்கும் சிவசேனாவின் பாவ்னா காவ்லிக்கு பதில் சஞ்சத் ரத்தோடிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட இருக்கிறது. அவ்வாறு கொடுக்கப்பட்டால் கட்சியில் இருந்து விலகுவேன் என்று பாவ்னா காவ்லி மிரட்டிக்கொண்டிருக்கிறார். தானே தொகுதியை பா.ஜ.க கேட்டுக்கொண்டிருக்கிறது. இத்தொகுதியில்தான் முதல்வர் ஷிண்டேயின் வீடு இருக்கிறது. எனவே எப்படியாவது இத்தொகுதியில் போட்டியிடவேண்டும் என்று சிவசேனா (ஷிண்டே) விரும்புகிறது.

ஆனால் இத்தொகுதியில் தற்போது எம்.பி-யாக இருக்கும் ராஜன் விச்சாரே, உத்தவ் தாக்கரே கட்சியில் இருக்கிறார். ஷிண்டேயின் சிவசேனாவில் செல்வாக்கு மிக்க தலைவர்கள் யாரும் இல்லை என்பதை சுட்டிக்காட்டி. அத்தொகுதி தங்களுக்கு ஒதுக்கப்படவேண்டும் என்று பா.ஜ.க கூறி வருகிறது. தானே தொகுதி பிரச்னையால் அருகில் உள்ள கல்யான் தொகுதிக்கு தனது மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டேயை வேட்பாளராக அறிவிக்க முடியாத நிலையில் முதல்வர் ஷிண்டே இருக்கிறார். தானே தொகுதி 1996 வரை பா.ஜ.க-விடம் தான் இருந்தது. பால் தாக்கரே கேட்டுக்கொண்டதால் அதனை சிவசேனாவிற்கு பா.ஜ.க விட்டுக்கொடுத்தது.

ஏக்நாத் ஷிண்டே – பட்னாவிஸ்

ஹின்கோலி தொகுதி சிவசேனா எம்.பி ஹேமந்த் பாட்டீலுக்கும் இம்முறை வாய்ப்பு கிடைக்காது என்று தெரிகிறது. இதனால் நாசிக், ஹின்கோலி, யவத்மால் சிவசேனா எம்.பி-க்கள் 3 பேருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் என்ற நிலை இருப்பதால், மூன்று பேரும் தங்களது ஆதரவாளர்களுடன் மும்பை வந்து முதல்வர் இல்லத்தில் முகாமிட்டு தங்களது தொகுதி தங்களுக்கு வேண்டும் என்று கூறிக்கொண்டிருக்கின்றனர்.

மற்றொரு புறம் எதிர்க்கட்சி கூட்டணியிலும் இன்னும் தொகுதிப் பங்கீடு முடியவில்லை. சரத் பவார் சற்று இறங்கி வந்து பிவாண்டி தொகுதியை கேட்பதை விட்டுக்கொடுத்துள்ளார். இதனால் அத்தொகுதி பிரச்னை முடிந்துவிட்டாலும், வடக்கு மும்பை தொகுதியையும் சிவசேனா (உத்தவ்) கேட்டுக்கொண்டிருக்கிறது. மேலும் முதற்கட்ட தேர்தல் நடக்க இருக்கும் ஐந்து தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரமும் சூடுபிடித்து இருக்கிறது. சரத் பவார், உத்தவ் தாக்கரே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *