புதுச்சேரி அ.தி.மு.க-வின் மாநிலச் செயலாளர் அன்பழகன், இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புதுச்சேரியில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் நடவடிக்கைகள் நேர்மையாக, வெளிப்படையாக, சமநிலையுடன் நடக்கவில்லை. புதுச்சேரி உள்துறை அமைச்சராக இருந்துகொண்டு, பா.ஜ.க நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடுகிறார் நமச்சிவாயம். அவருக்கு தேர்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக, அரசு இயந்திரங்கள் முழுமையாக துணை நிற்கின்றன. அவரது பிரசாரத்தில் காவல்துறை உள்ளிட்ட, பல்வேறு அரசு துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் தொடர்ச்சியாக கலந்து கொள்கின்றனர். அவரது ஒவ்வொரு பிரசாரத்தின் போதும், நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து வருகின்றன. ஆனால் தேர்தல் ஆணையம் அதை கண்டுகொள்ளவில்லை. தற்போது வயது முதிர்ந்தவர்களும், மாற்றுத்திறனாளிகளும் வீட்டில் இருந்தே தபால் வாக்குகள் பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
![முதல்வர் ரங்கசாமியுடன், பாஜக வேட்பாளர் நமச்சிவாயம்](https://gumlet.vikatan.com/vikatan%2F2024-04%2F58def3d4-3607-4b5d-8f08-48870c12a199%2F65f0931c7f73e.jpg?auto=format%2Ccompress)
அந்தப் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களை தங்கள் கையில் வைத்துக் கொண்டிருக்கும் பா.ஜ.க-வினர், தபால் வாக்கு செலுத்துபவர்களின் வீடுகளுக்குச் சென்று 500 ரூபாய் கொடுத்து வருகின்றனர். இந்த செயல் எந்தவித தயக்கமுமின்றி, சர்வ சாதாரணமாக வெளிப்படையாக நடக்கிறது. இந்த தேர்தலுக்காக பா.ஜ.க வேட்பாளருக்கு கன்ட்டெய்னர் மூலம் பணம் வந்திருப்பதாக பேசப்படுகிறது. அந்தப் பணம் முக்கிய நிர்வாகிகளிடம் பிரித்து கொடுக்கப்பட்டு, வாக்கு ஒன்றுக்கு ரூ.1,000 வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது. உலக அளவில் இந்தியா ஜனநாயக நாடு என பேசப்படுவதற்கு காரணம், இந்திய தேர்தல் ஆணையத்தின் பாகுபாடற்ற செயல்பாடுதான். ஆனால் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியைப் பொறுத்தவரை, இந்த தேர்தலில் ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டு வருகிறது. இந்திய தேர்தல் ஆணையம் இதில் உள்ள உண்மை நிலையை உணர்ந்து, நேர்மையான தேர்தல் நடத்தும் அதிகாரிகளை கூடுதலாக நியமனம் செய்ய வேண்டும்.