சென்னை: வெள்ளி முதல் வியாழன் வரை (22.12.2023 முதல் – 28.12.2023 வரை) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.

மேஷம்

கேது, சனி நன்மைகளை வழங்குவர். குலதெய்வத்தை வழிபட்டு செயல்பட நன்மையாகும்.

அசுவினி: உங்கள் நட்சத்திர அதிபதி ஆறாமிடத்தில் சஞ்சரிப்பதால் ஆரோக்கியம் சீராகும். எதிர்ப்பு விலகும். வழக்கு சாதகமாகும். நெருக்கடி நீங்கும். உங்கள் விருப்பம் நிறை வேறும். வேலைக்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

பரணி: ஏழாமிடத்தில் உங்கள் நட்சத்திர நாதன் சஞ்சரிப்பதால் பிறரிடம் எச்சரிக்கை அவசியம். லாப ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதால் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

கார்த்திகை 1ம் பாதம்: ராசிக்குள் சஞ்சரிக்கும் குரு பகவானால் வேலையின் காரணமாக அலைச்சல் அதிகரித்தாலும் அவரின் பார்வைகளால் குலதெய்வ அருள் உண்டாகும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். வருமானம் உயரும். ஒரு சிலருக்கு பொன் பொருளுடன் வாகனம் வாங்கும் யோகமும் ஏற்படும். இழுபறியாக இருந்த முயற்சி முன்னேற்றம் தரும்.

ரிஷபம்

ராகு நன்மைகளை வழங்குவார். துர்க்கையை வழிபட வாழ்க்கை வளமாகும்.

கார்த்திகை 2,3,4: வாரத்தின் முதல் இரண்டு நாட்கள் செலவு அதிகரித்தாலும் அதன்பின் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும், எதிர்பார்த்த ஆதாயம் வரும். காரியம் கை கூடும். உங்கள் ரகசிய திட்டம் பலிதமாகும். குலதெய்வத்தை வழிபட்டு வர சங்கடம் நீங்கும். வருமானம் உயரும்.

ரோகிணி: லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு உங்கள் வருவாயை அதிகரிப்பார். மேலைநாட்டு தொடர்பு ஆதாயத்தை வழங்கும். திட்டமிட்ட செயல்படும் முயற்சி வெற்றியாகும். சங்கடம் விலகும். பணிபுரியும் இடத்தில் மறைமுக எதிர்ப்பு தோன்றும் என்பதால் எச்சரிக்கை அவசியம்.

மிருகசீரிடம் 1,2: கடந்த வாரத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். புதிய முயற்சி வெற்றியாகும். ஜீவன சனியும் லாப ராகுவும் உங்கள் செயல்களில் முன்னேற்றத்தை உண்டாக்குவர். பணம் பல வழியிலும் வரும். வழக்குகளில் இருந்து வெளியில் வருவீர். புதிய தொழில் தொடங்கும் முயற்சியை மேற்கொள்வீர்.

மிதுனம்

சுக்கிரன், செவ்வாய், சனி, குரு நன்மைகளை வழங்குவர். உலகளந்த பெருமாளை வணங்கி வழிபட வளமுண்டாகும்.

மிருகசீரிடம் 3,4: இதுவரை இருந்த சங்கடம் யாவும் முடிவிற்கு வரும். உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் இருந்த பிரச்னை விலகும். எண்ணம் நிறைவேறும். எதிர்பார்த்த வருமானம் வரும். வீட்டில் சுப செயல் நடக்கும்.

திருவாதிரை: முக்கிய கிரகம் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிப்பதால் செயல்களில் லாபம் உண்டாகும். வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த தகவல் வரும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரம் ஆதாயத்தை நோக்கிச் செல்லும். புதிய நபர்களால் ஆதாயம் அதிகரிக்கும்.

புனர்பூசம் 1,2,3: உங்கள் செயல்களில் ஏற்பட்ட சங்கடம் விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் சூடு பிடிக்கும். பூமி சம்பந்தப்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் செல்வாக்கு உயரும். தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகி ஒற்றுமை ஏற்படும்.

கடகம்

கேது, சுக்கிரன், சூரியன் நன்மைகளை வழங்குவர். சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட சங்கடம் நீங்கும்.

புனர்பூசம் 4: நேற்று இழுபறியாக இருந்த முயற்சி வெற்றியாகும். உங்களுக்கு ஒரு அசாத்திய துணிச்சல் வரும். எண்ணம் எளிதாக பூர்த்தியாகும். வருமானம் அதிகரிக்கும். வேலைக்காக முயற்சித்து வந்தவர்களின் விருப்பம் நிறைவேறும்.

பூசம்: மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் கேதுவும், ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் சூரியனும் உங்கள் முயற்சிகளுக்கு முன்னேற்றம் தருவர். செயல்களில் எதிர்பார்த்த ஆதாயம் தோன்றும். உங்களை உதாசீனம் செய்தவர் உங்கள் உதவி கேட்டு வருவர். அலுவலகத்தில் செல்வாக்கு உயரும்.

ஆயில்யம்: எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். கல்வி, நீதித்துறையில் பணியாற்றுபவர்களின் மதிப்பு அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். குடும்பத்தில் இருந்த சங்கடம் நீங்கும். வரவு அதிகரிக்கும்.

சிம்மம்

குரு நன்மைகளை வழங்குவார். சூரிய பகவானை வணங்கி வர வளமுண்டாகும்.

மகம்: குரு பகவான் ஒன்பதாமிடத்தில் சஞ்சரிப்பதால் முயற்சி வெற்றியாகும். தடைபட்டிருந்த வேலை நடந்தேறும். எதிர்பார்த்த வருமானம் வரும், தொழில் உத்தியோகத்தில் மகிழ்ச்சியான நிலை ஏற்படும். உங்கள் செல்வாக்கு உயரும்.

பூரம்: இரண்டாமிடத்தில் கேது, ஏழில் சனி, எட்டில் ராகு சஞ்சரித்து உங்களுக்கு எதிர்மறையான பலன்களை வழங்குவர். பாக்கிய குருவின் பார்வையால் சங்கடம் உங்களை நெருங்காமல் போகும். உங்கள் நிலையில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும்.

உத்திரம் 1:உங்கள் செயல்களில் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். குருவின் பார்வைகளால் ஆற்றல் அதிகரிக்கும், எதிர்ப்பு விலகும், வருமானம் உயரும், வழக்குகள் சாதகமாகும். உங்களை அலட்சியம் செய்தவர் தேடி வருவார்கள்.

கன்னி

சுக்கிரன், செவ்வாய், சனி நன்மைகளை வழங்குவர். விநாயகப் பெருமானை வழிபட சங்கடம் தீரும்.

உத்திரம் 2,3,4: ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் கேதுவால் குழப்பம் அதிகரிக்கும். செயல் குளறுபடியாகும் என்றாலும், சுக்கிரன், செவ்வாய், சனி சஞ்சார நிலையால் முயற்சியில் ஆதாயம் தோன்றும். எதிர்பார்த்த வருமானம் வரும். வெள்ளி அன்று எதிர்பாராத நெருக்கடிகளுக்கு ஆளாவீர்.

அஸ்தம்: உங்கள் செயல்களில் லாபம் அதிகரிக்கும். நினைப்பது நிறைவேறும். உடல்நிலையில் இதுவரை இருந்த சங்கடம் விலகும். மனதில் இருந்த பயம் போகும். வழக்கு உங்களுக்கு சாதகமாகும். முயற்சிக்கேற்ற வருவாய் உண்டாகும். வெள்ளி,சனிகிழமைகளில் எதிர்பாராத சங்கடம் தோன்றும்.

சித்திரை 1,2: தைரிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயால் உங்கள் எண்ணம் பூர்த்தியாகும். தன ஸ்தான சுக்கிரனின் அருளால் வரவேண்டிய பணம் வரும். நெருக்கடி நீங்கும். வெளி வட்டாரத்தில் சாதுரியமாக செயல்பட்டு வெற்றியடைவீர். சனி ஞாயிறு அன்று செயல்களில் கவனம் அவசியம்.

சந்திராஷ்டமம்

22.12.2023 அதிகாலை 12:00 மணி – 24.12. 2023 அதிகாலை 4:03 மணி

துலாம்

சுக்கிரன், சூரியன்,ராகு, குரு நன்மையை வழங்குவர். வீரட்டேஸ்வரரை வழிபட சங்கடம் குறையும்.

சித்திரை 3,4: குரு பகவான் வக்கிர நிவர்த்தி அடைந்து உங்கள் ஜென்ம ராசியை பார்ப்பதால் இதுவரையில் இருந்த சங்கடம் குறையும். நெருக்கடி விலகும். முயற்சி வெற்றியாகும். ராசிநாதன் ஆட்சி பெற்றிருப்பதால் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். ஞாயிறு அன்று சில சங்கடங்களுக்கு ஆளாவீர்.

சுவாதி: கடந்த வார நிலையில் மாற்றம் ஏற்படும். மூன்றாமிட சூரியனால் உங்கள் முயற்சி வெற்றியாகும். அரசு வழி செயல்களில் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். ஞாயிறு திங்கள் அன்று உங்கள் செயல்களில் விழிப்புணர்வு அவசியம்.

விசாகம் 1,2,3: விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் செலவு பல வழியிலும் அதிகரிக்கும். ஆறாமிட ராகுவால் முயற்சி முன்னேற்றம் அடையும். உடல்நிலையில் இருந்த சங்கடம் நீங்கும். குரு பகவானின் சப்தம பார்வையால் சங்கடம் விலகும். திங்கள் செவ்வாய் அன்று சில நெருக்கடி உண்டாகும்.

சந்திராஷ்டமம்

24.12.2023 அதிகாலை 4:04 மணி – 26.12.2023 காலை 10:13 மணி

விருச்சிகம்

கேது, சுக்கிரன் நன்மைகளை வழங்குவர். திருச்செந்தூர் முருகனை வழிபட்டுவர வளமுண்டாகும்.

விசாகம் 4: லாப ஸ்தான கேதுவால் உங்கள் முயற்சி லாபமாகும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை அடைவீர். எதிரி விலகுவர். வரவு அதிகரிக்கும். முயற்சி அனுகூலமாகும். செவ்வாய் அன்று செயல்களில் கவனம் தேவை.

அனுஷம்: லாப ஸ்தானத்தில் கேது பலம் பெற்றிருப்பதுடன், குரு பகவானின் பார்வைகள் ஜீவன, குடும்ப ஸ்தானங்களுக்கு உண்டாவதால் எண்ணம் நிறைவேறும். முயற்சி பலிக்கும். வியாபாரம் விருத்தியாகும். எதிர்பார்த்த தகவல் வரும். செவ்வாய் புதன் அன்று செயல்களில் விழிப்புணர்வு அவசியம்.

கேட்டை: கடந்த வாரத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். உங்கள் தேவைகளை எளிதாக அடைவீர். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். தடைபட்டிருந்த செயல் விருப்பப்படி நடக்கும். வருமானம் அதிகரிக்கும். புதன் வியாழன் அன்று சில சங்கடங்களை சந்திப்பீர்.

சந்திராஷ்டமம்

26.12.2023 காலை 10:14 மணி – 28.12.2023 மாலை 6:49 மணி

தனுசு

சனி, குரு நன்மைகளை வழங்குவர். குரு பகவானை வணங்கி வர வளம் உண்டாகும்.

மூலம்: உங்கள் ராசியாதிபதியின் பார்வை உங்களுக்கு உண்டாகி இருப்பதால் செல்வாக்கு உயரும். முயற்சிகளில் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் தோன்றும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். வருமானம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு புதிய பொறுப்பு வரும்.

பூராடம்: மூன்றாமிட சனியும், லாபஸ்தானத்தில் ஆட்சி பெற்றுள்ள நட்சத்திர நாதனும் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவர். அரசு உத்தியோகஸ்தர்கள், அரசியல்வாதிகளின் நிலை உயரும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வருமானம் ஏற்படும்.

உத்திராடம் 1: சுறு சுறுப்பாக செயல்பட்டு வேலைகளை முடிப்பீர். வேலை தேடியவர்களுக்கு நல்ல தகவல் வரும். தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் செல்வாக்கு உயரும். வருமானம் அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம்

28.12.2023 மாலை 6:50 மணி – 31.12.2023 அதிகாலை 5:33 மணி

மகரம்

ராகு, செவ்வாய் நன்மைகளை வழங்குவர். நரசிம்மரை வழிபடுவதால் சங்கடம் நீங்கும்

உத்திராடம் 2,3,4: மூன்றாமிட ராகுவால் முயற்சி வெற்றியாகும். பணியாளர்கள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். லாப செவ்வாய் சமர்த்தியமாக செயல்பட வைப்பார். சட்ட சிக்கல் முடிவிற்கு வரும். அரசுப்பணியாளர்களின் செல்வாக்கு உயரும்.

திருவோணம்: உங்கள் முயற்சி இந்த வாரத்தில் எளிதாக நிறைவேறும். எதிர்பார்த்த பணம் வரும். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். ஆரோக்கியம் சீராகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலைத்தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.

அவிட்டம் 1,2: லாப ஸ்தான செவ்வாயால் முயற்சி வெற்றியாகும். புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவீர். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். மூன்றாமிட ராகுவால் அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும்.

கும்பம்

சூரியன் நன்மைகளை வழங்குவார். சனீஸ்வரரை வழிபட சங்கடம் விலகும்.

அவிட்டம் 3,4: ஜென்ம சனி, குடும்ப ராகு, அஷ்டம கேது என்று பெரும்பாலான கிரகம் எதிர்மறையாக சஞ்சரிப்பதால் செயல்களில் கவனம் தேவை. புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. லாப சூரியனால் அரசு வழி முயற்சி ஆதாயமாகும். எதிர்பார்த்த லாபம் அதிகரிக்கும்.

சதயம்: ராசி நாதன் ராசிக்குள் சஞ்சரிப்பதால் சங்கடம் அதிகரிக்கும். முயற்சி இழுபறியாகும். பணிபுரியும் இடத்தில் கவனம் சிதறும். இரண்டாமிட ராகுவால் உங்கள் நிலைக்கும் தாழ்ந்தவர்கள் காட்டும் ஆசை வார்த்தைகளை நம்புவீர்கள். காவல், சட்டத்துறை விவகாரங்களில் சில நெருக்கடி தோன்றும்.

பூரட்டாதி 1,2,3: சந்திரனின் சஞ்சார நிலைகளால் உங்கள் ஆற்றல் வெளிப்படும். எதிர்ப்பு விலகும். திட்டமிட்டு செயல்பட்டு ஆதாய வேலைகளை முடித்துக் கொள்வீர். லாப சூரியனால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். ஆதாயம் அதிகரிக்கும்.

மீனம்

குரு, சந்திரன், சூரியன் நன்மையை வழங்குவர். நவக்கிரக வழிபாடு நன்மை தரும்.

பூரட்டாதி 4: உங்கள் ராசி நாதன் வக்கிர நிவர்த்தி அடைந்திருப்பதால் செயல்களில் தெளிவு ஏற்படும். முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த வருமானம் வரும். பத்தாமிட சூரியனால் நெருக்கடி நீங்கும். அரசு வழி முயற்சி ஆதாயமாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். மனதில் இருந்த பயம் விலகும்.

உத்திரட்டாதி: தன ஸ்தானத்தில் குரு, தொழில் ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் நினைத்தவற்றை நடத்திக்கொள்வீர். உத்தியோகத்தில் இருந்த சிக்கல் விலகும். ஜென்ம ராகுவால் மனம் பேதலிக்கும். உங்களுக்கும் கீழானவர்களால் அவப்பெயர் ஏற்படும் என்பதால் விழிப்புணர்வு தேவை.

ரேவதி: ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் ராகுவும், ஏழாமிடத்தில் சஞ்சரிக்கும் கேதுவும் உங்களை சங்கடத்திற்கு ஆளாக்குவர். நண்பர்களுடனும் வாழ்க்கைத் துணையுடனும் பிரச்னை ஏற்படும். ஆசைகளுக்கு ஆட்பட்டு குறுக்குவழி செயல்களில் ஈடுபடுவோருக்கு நெருக்கடி அதிகரிக்கும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *