அதன்படி, நவம்பர் 25-ம் தேதி மாலை ஆறு மணிக்குள், தான் பேசியது குறித்து விளக்கமளிக்குமாறும், தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், ராகுல் காந்தி தரப்பிலிருந்து எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை. இன்னொருபக்கம், ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்குமாறு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது. இந்த வழக்குமீதான விசாரணை, நீதிபதிகள் மன்மோகன், மினி புஷ்கர்ணா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாணைக்கு வந்தது.
![டெல்லி உயர் நீதிமன்றம்](https://gumlet.vikatan.com/vikatan%2F2023-03%2F5bd4fd64-bbc3-43d6-9144-6447febdf7ce%2F1853793_1807159_985169_delhi_hc.jpg?auto=format%2Ccompress)
அப்போது இதனை விசாரித்த நீதிமன்ற அமர்வு, “மக்கள் அனைத்தையும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். மக்கள்மீது நம்பிக்கை வைப்போம். என்ன செய்ய வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். இப்போதைக்கு, அவரின் (ராகுல் காந்தி) பேச்சு ரசிக்கும்படியாக இல்லை என்றே நங்கள் கூற முடியும். மேலும், தேர்தல் ஆணையம் கொடுத்த காலக்கெடுவும் முடிந்துவிட்டது, எந்தவொரு விளக்கமும் தேர்தல் ஆணையத்துக்கு வரவில்லை. எனவே, எட்டு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு இந்த நீதிமன்றம் அறிவுரை வழங்குகிறது” என்று கூறியது.