வறட்சி நிவாரணம் வழங்குவது தொடர்பாக, உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தும்படி, டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், முதல்வர் சித்தராமையா நேற்று வலியுறுத்தினார்.
கர்நாடகா முதல்வர் சித்தராமையா, நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக, இம்மாதம் 18ம் தேதி, பெங்களூரில் இருந்து, டில்லி சென்றார்.
வறட்சி நிவாரணம் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து, நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மனு அளித்தார்.
பின், கர்நாடக வாரிய தலைவர்கள் பட்டியல் இறுதி செய்வது குறித்து, காங்கிரஸ் பொது செயலர் வேணுகோபால், துணை முதல்வர் சிவகுமாருடன் நள்ளிரவு வரை முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, நேற்று சந்தித்து பேசினார். அப்போது, வறட்சி நிவாரணமாக 18,177 கோடி ரூபாய் வழங்கும்படி, பிரதமரிடம் அளித்த மனுவில் குறிப்பிட்ட அம்சங்கள் அடங்கிய மனுவை இவரிடமும், முதல்வர் அளித்தார்.
வறட்சி நிவாரணம் தொடர்பாக, விரைவில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தி நிவாரண நிதி வழங்கும்படி வலியுறுத்தினார்.
இதே வேளையில், சிறிது நேரம் கர்நாடக அரசியல் பற்றியும் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சந்திப்பின் போது, மாநில வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா, ராஜ்யசபா காங்கிரஸ் எம்.பி.,க்கள் ஹனுமந்தையா, சந்திரசேகர் ஆகியோரும் உடனிருந்தனர்.
டில்லி பயணம் முடிந்து, இன்று காலை 8:00 மணிக்கு சிறப்பு விமானம் மூலம், முதல்வர் பெங்களூருதிரும்புகிறார்.
– நமது நிருபர் –
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்