தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதும், அவரின் மனைவி விசாலாட்சி மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை 2011-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில், “2006 முதல் 2011 வரை உயர் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி, விசாலாட்சி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ1,72,63,468 சொத்து சேர்த்திருக்கின்றனர்” எனக் குறிப்பிட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம்,”லஞ்ச ஒழிப்புத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதரம் இல்லை” எனக் கூறி இருவரையும் 2016-ம் ஆண்டு விடுதலை செய்தது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-12/22b6ea96-d77b-436a-bd4d-2549a1ad0a04/6572c148f067a.jpg)
இந்தத் தீர்ப்பை எதிர்த்து 2017-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு நடந்து வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார். இந்த நிலையில்தான், நேற்று முன்தினம் தீர்ப்பளித்த நீதிபதி, “பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி இருவரையும் விடுதலை செய்த நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. இருவரும் 21-ம் தேதி ஆஜராக வேண்டும்” எனத் தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில், இன்று பொன்முடியும், அவரது மனைவியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, “சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கும் அவரின் மனைவிக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், இரண்டுபேருக்கும் தலா ரூ. 50 லட்சமும் அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும், பொன்முடி, மற்றும் அவரின் மனைவிக்கு விதிக்கப்பட்ட தண்டனை தொடர்பாக மேல்முறையீடு செய்வதற்க்காக 30 நாள்களுக்கு தண்டனை நிறுத்திவைக்கப்படுகிறது” எனக் குறிப்பிட்டார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-12/81fabb68-92e7-4483-b9c5-79e19c54eea6/WhatsApp_Image_2023_12_21_at_11_05_02_AM.jpeg)
அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில், அவர் நீதிமன்றம் மூலம் தண்டிக்கப்படவில்லை என்பதால், இலாக இல்லாத அமைச்சராக அவர் தொடர்கிறார். ஆனால், நீதிமன்றம் மூலம் தண்டனைப் பெற்ற அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ-வாக இருக்கும் அடிப்படைத் தகுதியையே இழக்கிறார். அதனால், அவரது அமைச்சர் பதவியையும் தானாகவே இழந்ததாகிவிடும்.
இந்த தண்டனை மேல் முறையீட்டுக்குப் பிறகும் தண்டனை உறுதி செய்யப்பட்டால், மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், அதைத் தொடர்ந்து இந்திய அரசியல் சாசனத்தின் படி, ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதின் அடிப்படையிலும், இந்த தீர்ப்பு பொன்முடியின் அரசியல் வாழ்க்கையின் பெரும் திருப்பமாகவே கருதப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.