வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஐதராபாத்: ‛‛ஓட்டு வங்கி அரசியல் காரணமாக, ஐதராபாத் விடுதலை நாளை கொண்டாட அரசியல் கட்சிகள் தயங்கின” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
ஐதராபாத் கடந்த 1948ம் ஆண்டு செப்.,17 அன்று இந்தியாவுடன் இணைந்தது. ஐதராபாத் விடுதலை தினமாக இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, ஐதராபாத்தில் உள்ள ‛பரேட்’ மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட அமித்ஷா, தேசியக் கொடி ஏற்றி வைத்தார்.
பிறகு அவர் பேசியதாவது: ஓட்டு வங்கி அரசியல் காரணமாக ஐதராபாத் விடுதலை நாளை அரசியல் கட்சிகள் புறக்கணித்தது துரதிர்ஷ்டவசமானது. நாட்டின் வரலாற்றை புறக்கணிக்கும் அரசியல் கட்சிகளை மக்கள் புறக்கணிப்பார்கள். கடந்த 75 ஆண்டுகளாக வரலாற்று சிறப்புமிக்க ஐதராபாத் விடுதலை நாளை எந்த அரசுகளும் கொண்டாடவில்லை. சமரச அரசியல் செய்யும் அரசியல் கட்சிகள் பயந்து கொண்டு கொண்டாடவில்லை. ஆனால், ஐதராபாத் விடுதலை நாளை கொண்டாட மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஐதராபாத் விடுதலை நாளுக்கான பெருமை நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலையேச் சேரும். அவரின் முயற்சியால் தான், நிஜாம் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரணடைந்தார். இவ்வாறு அமித்ஷா பேசினார்.
வாழ்த்து
முன்னதாக வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஐதராபாத் மக்கள் அனைவருக்கும் ஐதராபாத் விடுதலை தின வாழ்த்துக்கள். இந்த நாள் ஐதராபாத் மக்களின் அசைக்க முடியாத தேசபக்திக்கும், தீய ஆட்சியில் இருந்தும் மற்றும் நிஜாமின் அடக்குமுறையில் இருந்து விடுதலை பெற ஐதராபாத் மக்களின் இடைவிடாத போராட்டத்திற்கும் ஒரு சான்றாகும் எனக்கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement